வெள்ளி, 22 மார்ச், 2024

நீர்ப்பால் தாய்ச்சிகள் - மகாராசன்



மேகங்கள் முட்டிக்கொண்டு
சோவெனப் பெய்த
பெருமழையின் ஈரப்புள்ளிகள்
சிற்றோடை நீர்க்கோடுகளால்
ஆறுகளை வரைந்துகொண்டிருந்தன.

கார்காலத்தின் பசுங்கனவு
ஆறுகளில் மிதந்து வழிந்தோடின.

நுரைகள் மிதக்க 
நாணலைக் கோதி
கரைகளை இறுகத் தழுவி
கழனிகளில் பாய்ந்து
பயிர்த் தாலாட்டை இசைத்த
ஆறுகளின் நாவுகள்
ஈரம் பாடுதலை நிறுத்திக்கொண்டன.

நீர் முகந்த ஊருணிகள்
பள்ளமடை பாய்ந்த கண்மாய்கள்
வெக்கை குளிர்வித்த குளங்கள்
காடுகளில் கசிந்த 
ஓடைகள் யாவும்
நீர் அத்துக் கிடக்கின்றன.

நிலத்தின் சாவையும்
நீர்த்தடக் கொலைகளையும்
ஒப்பாரியாய்ச் சொல்லி அழ
கரைகளும் இல்லை; 
ஆறுகளும் இல்லை.

நீர்ப்பால் தாய்ச்சிகள்
சீரழிந்த வதைகளை
ஆறுகள் யாரிடம் சொல்லி அழும்?
கரைகளிடம்தான் சொல்லி அழும்.

கரைகள் காணாத ஆறுகள்
ஊர்களை மூழ்கடிக்கும் கனவுகள்
வந்து வந்து போகின்றன.

ஏர் மகாராசன் 

மார்ச்சு 22 - உலகத் தண்ணீர் நாள்.

பூங்குருவி வாழ்க்கை - மகாராசன்


பூஞ்செடிகளின் 
இலைகளைத் தைத்து 
கூடுகள் சமைத்து
சிறகடித்து நீந்தும்
தேன் சிட்டுகள்
வாழ்தலின் பக்குவத்தை
சொல்லிவிட்டுப் பறக்கின்றன.

மண்ணுக்குள் புதைந்திருக்கும் 
பெருமரத்து வேர்களின் 
நுனி முடிச்சுகளோடு 
கிளையில் துளிர்க்கும் இலைகளின் 
காதல் தொடுப்பை
அலர் பரப்பிச் சொல்கின்றன பூக்கள்.

இறகின் கனமும்
பூவின் மணமும் 
அரும்பிடும் வாழ்க்கை 
இனிதுதான்.

ஏர் மகாராசன் 

மார்ச்சு 20 - உலகச் சிட்டுக் குருவிகள் நாள்.

ஞாயிறு, 17 மார்ச், 2024

ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்: மகாராசன் - அம்சம்


பெருங்கனவோடும் பேரன்போடும் செந்தமிழ் உணர்வோடும் வளர்ந்துவரும் அன்பு மகள் அங்கவை யாழிசை அவர்கள், சிறு வயதிலிருந்தே எழுத்து, பேச்சு, கலை எனப் பன்முகத் திறன்களோடு உறவாடி வருபவர். எமது கல்வி, சமூகம் மற்றும் எழுத்துச் செயல்பாடுகள் யாவற்றுக்கும் மகளாகவும் தோழியாகவும் இருந்து அருந்துணை புரிந்துகொண்டிருப்பவர். 

குழந்தையாக இருக்கும்போதுகூட புத்தகங்கள்தான் அவரின் விளையாட்டுப் பொருட்களாக இருந்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் செம்பச்சை நூலகப் புத்தகங்கள் யாவற்றிலும் அவரின் கண்களும் கைகளும் பட்டிருக்கும் என்றே கருதுகிறோம். பள்ளிக்கூடப் புத்தகங்கள் என்பதையெல்லாம் தாண்டி வேறுவேறு புத்தகங்களைப் படிப்பதில் எப்போதுமே நாட்டம் கொண்டிருந்தார். அவர் வாசித்த புத்தகங்கள் குறித்து எம்மிடம் மிக விரிவாகவே பேசிடுவார். 

தொடர்ச்சியான புத்தக வாசிப்புதான் அவரது பன்முகத்திறனுக்கும் பெருந்துணை புரிந்திருக்கிறது. பேச்சு, கட்டுரை, ஓவியம், நாட்டியம், கைவினை எனப் பலவகைப்பட்ட திறன்வெளிப்பாட்டிற்காகப் பரிசுகள் பலவற்றையும் பெற்றிருக்கிறார். 

புத்தக வாசிப்பில் பெருவிருப்பத்தோடும் உள்ளார்ந்தும் அவர் பயணப்படுவதை அருகிலிருந்து பார்த்துப் பெருமைப்பட்டிருக்கிறோம்; வியந்திருக்கிறோம். ஒரு புத்தகத்தை எடுத்தால், அது எவ்வளவு பெரிய புத்தகமாக இருந்தாலும்கூட ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவார்.

இப்படியே மற்ற மற்ற புத்தகங்களையெல்லாம் படித்துக்கொண்டிருந்தால், அவரது பள்ளிப் படிப்பில் தொய்வு ஏற்பட்டுவிடுமோ என்றுகூட நாங்கள் நினைத்தது உண்டு. இதைக் குறித்த எண்ணத்தை அவரிடம் வெளிப்படுத்தியபோது, இந்தப் புத்தகங்கள் படிக்கும்போது பள்ளிப் புத்தகங்கள் எல்லாம் மிக எளிது என்றே கூறினார். அவர் சொன்னவாறே பள்ளிப் படிப்புகளிலும் தேர்வுகளிலும் உயர்மதிப்பெண்களைத்தான் பெற்று வந்தார்.

தமிழின் மீதும் புத்தகங்கள் மீதும் தமது ஈடுபாட்டை அதிகப்படுத்திக் கொண்டிருந்ததோடு, வாசிப்புச் செயல்பாட்டையும் தீவிரப்படுத்தியிருந்தார். ஒரு கட்டத்தில், கல்லூரியில் நான் தமிழ்ப் பாடம் எடுத்துப் படிக்கட்டுமா என்றார். ஏன் இந்த முடிவு? எனக் கேட்டபோது, தமிழ் மீது அவ்வளவு பற்றும் உணர்வும் இருப்பதாகவும், தமிழுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் எனவும் கூறினார். அம்மாவும் அப்பாவும் தமிழ் படித்திருக்கிறோம். தமிழ் ஆசிரியராய் இருக்கிறோம். நாங்கள் தமிழ் குறித்துப் பேசுவதைக் காட்டிலும், அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் பயணிப்பவர்கள் தமிழ் குறித்துப் பேசினால் அதற்குச் சமூக முக்கியத்துவம் இருக்கும். தமிழுக்கு ஏதாவது செய்திட வேண்டுமானால், பிற துறைகளில் பயணித்துத் தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டும்; அங்கிருப்பதைத் தமிழுக்குக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் தமிழை நவீன உலகுக்குக் கடத்த முடியும் என்றோம். 

அப்படியானால், நான் என்ன படிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள்? என்று எம்மிடமே கேட்டார். குடும்ப உறவுகள் பலரும் மருத்துவர்கள் என்பதால், மருத்துவம் படிக்கலாம் என்றபோது, அலோபதி மருத்துவமெல்லாம் படிக்க விருப்பமில்லை. சித்த மருத்துவம் படிக்கவே விரும்புகிறேன் என்றார். மருத்துவப் படிப்புகூட தமிழோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்றே கருதினார். அந்தளவுக்கு அவரது தமிழ் ஈடுபாடு தீவிரப்பட்டிருந்தது.

புத்தகங்கள் அவரது அறிவுலகத்தை மேலும் மேலும் வளப்படுத்தின. புத்தகங்களை வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், வாசிக்கும் ஒவ்வொரு புத்தகத்தைக் குறித்தும் பேசுவதோடு மட்டும் நிறைவடைந்துவிடாமல், வாசிக்கிற புத்தகங்களைக் குறித்து எழுதவும் முயற்சிக்க வேண்டும் என அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருந்தோம். அவ்வப்போது அவர் வாசித்த புத்தகம் குறித்து அவரது உணர்வுகளையும் அனுபவங்களையும் எழுதிக் காண்பிப்பார். அவர் எழுதிய கட்டுரைகளில், எழுத்துலகம் குறித்த அகத்தையும் புறத்தையும் மட்டுமல்ல, எழுத்துலகம் குறித்த அவரது அகத்தையும் புறத்தையும் காண முடிந்தது. 

பல்வேறு புத்தகங்களை அவர் வாசித்திருந்தாலும், கையறு நதி, சூல், படைவீடு, நடுகல், புறப்பாடு, சுளுந்தீ ஆகிய பெருங்கதை நூல்களைக் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பல்வேறு இணைய இதழ்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளிவந்தன. 

தமிழ்கூறும் நல்உலகம், எம் மகள் அங்கவை யாழிசை அவர்களின் எழுத்துகளை வரவேற்றும் பாராட்டியும் வாழ்த்தியும் மகிழ்ந்தன. அக்கட்டுரைகள் யாவும் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளன. அங்கவை யாழிசை அவர்களின் முதல் நூல் இது. 

தமிழ் சார்ந்தும், சித்த மருத்துவம் சார்ந்தும் இன்னும் நிறைய எழுதுவார் எனும் நம்பிக்கை எமக்கிருக்கிறது. தமிழ் உம்மை வாழ வைக்கும்; மிளிரச் செய்யும். 

தமிழ் உறவுகள் வாழ்த்தி வரவேற்பதோடு வழிகாட்டுங்கள்; வழி நடத்துங்கள். இன்னும் வளம் பெறுவார்.

எழுத்துலகில் பயணப்படும் அன்பு மகளுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்
அப்பாவும் அம்மாவுமான
மகாராசன் - அம்சம்.

*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


புதன், 13 மார்ச், 2024

அங்கவை யாழிசையின் வாசிப்பு உணர்வு - விஜயபானு


அன்பிற்கினிய அங்கவை யாழிசை அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தங்கள் முதல் படைப்புக்குக் கூறுகிறேன். இவ்வாறு சிறுவயதில் தங்களின் பரந்த வாசிப்பு என்னை வியப்பிற்கு உள்ளாக்கியது.

தாங்கள் நூல்களை உள்வாங்கிய விதமும் அதை கட்டுரைகளாக எழுதிய விதமும் என்னை ஆச்சரியப்படுத்தியது. தாங்கள் எழுதிய ஆறு கட்டுரைகளும் ஆறு விதமான கதைக்களத்தைக் கொண்டுள்ளன. இதிலிருந்து தங்களின் பரந்த வாசிப்பு உணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

தங்கள் வீட்டில் உள்ள செம்பச்சை நூலகம் போல் அனைவர் வீட்டிலும் ஒரு சிறு நூலகமாவது அமைத்தால் இன்னும் பல யாழிசைகளைக் கேட்க முடியும் என்று தோன்றுகிறது. 

தாங்கள் எழுதிய கட்டுரையைப் போல் தங்கள் நூலுக்கும் வேறொருவர் கட்டுரை எழுதும் அளவிற்குத் தாங்கள் எழுத்து உலகில் பயணிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். 

எழுத்து உலகில் மட்டுமல்லாது, சித்த மருத்துவத் துறையிலும் சாதனை படைக்க என்னுடைய வாழ்த்துகள். தங்களை இவ்வாறு உருவாக்கிய தங்கள் பெற்றோருக்கும் என்னுடைய வணக்கங்கள்.

அன்புடன்
திருமதி விஜயபானு,
ஆசிரியர்,
ஈரோடு.
*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.

ஞாயிறு, 10 மார்ச், 2024

திராவிடம் என்பது கற்பனைப் பெயர் :பாவலரேறு பெருஞ்சித்திரனார்.


திராவிடம் என்னும் சொல் ஆரியர் உருவாக்கிய சொல். அது முந்தித் தமிழர் வரலாற்றிலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ எங்கும் இல்லை. 

இக்கால் தூய தமிழர் மதங்களாகிய சிவனியமும் (சைவம்) மாலியமும் (வைணவம்) எவ்வாறு ஆரியக் கலப்பால் இந்து மதம் என்றொரு புதுப்பெயரால் குறிக்கப் பெறுகின்றனவோ, அவ்வாறு, தமிழம் (தமிழ்மொழி) அவர்களால் திராவிடம் என்று குறிக்கப் பெற்றது. 

பின்னர் அது, தமிழ் தவிர்த்த - தமிழினில் கிளைத்த மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு முதலிய மொழிகளைக் குறிப்பதற்கு ஆகிய சொல்லாகக் கால்டுவெல் போலும் மொழி நூல் ஆசிரியர்களால் பயன்படுத்தப் பெற்றது. இனி அதனினும் பின்னர், திராவிட மொழிகள் தமிழினின்று பிரிந்த சேய்மொழிகள் என்பதைப் பெருமைக் குறைவாகக் கருதிய அத்திராவிட மொழியாசிரியர்களும் புலவர்களும், திராவிட மொழிகளுக்கும் மூலமொழியாக இருந்த ஒரு பழம்பெரும் மொழியைக் குறிக்கப் பயன்படுத்திக்கொண்டனர். 

ஆனால், உண்மையில் திராவிடம் என்று ஒரு மொழியோ, அது தழுவிய ஓர் இனமோ என்றுமே இருந்தன அல்ல. இந்து மதம், இந்தியா போலும் அதுவும் ஒரு கற்பனைப் பெயரே. வரலாற்றுப் பெயரே அன்று. தமிழே ஆரிய வழக்கில் திராவிடம் ஆயிற்று. எனவே, தமிழரே திராவிடர் என்று அவர்களால் குறிக்கப்பட வேண்டியவராகவும் ஆயினர்…

தமிழ் என்னும் மொழியை இன்றைய மலையாளிகளும் கன்னடியரும் தெலுங்கரும் தங்கள் மொழிகளுக்கு மூலமொழி என்று ஏற்றுக்கொள்ள விரும்பாதது போலவே, தாங்கள் திராவிட இனத்தவர் என்பதையும் ஒப்புக்கொள்ள விரும்பாததையும் கவனிக்கவும்.

*

மகாராசன் தொகுத்த திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து..

*

தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-

நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506

ஞாயிறு, 3 மார்ச், 2024

அங்கவை யாழிசை: நம்பிக்கை ஒளிக்கீற்று - லட்சுமி.ஆர்.எஸ்


தோழர்கள் அம்சம் - ஏர் மகாராசன் தம்பதிகளின் புதல்விதான் அங்கவை யாழிசை. சென்னை, தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இளநிலை சித்த மருத்துவப் படிப்பு பயின்று வருகிறார். (19 வயதிருக்கலாம்). முதலில் அந்தச் சின்னஞ்சிறு குருத்திற்கு அன்பும் வாழ்த்தும் பாராட்டும்..

சிறு பிள்ளைகள் இலக்கிய உலகிலே சிறகடித்துப் பறப்பது எத்தனை ஆனந்தத்தையும் நெகிழ்வையும் தருகிறது தெரியுமா...? மகிழ்வோடு கண்ணில் நீர் பெருகுகிறது மகளே அங்கவை… தமிழ்த்தாயும் இந்நூலைக் கரங்களில் ஏந்தி மகள் அங்கவையை வாரியணைத்து ஆசிர்வதிப்பாள்.

அலைபேசியில் முடங்கி இருக்கும் இளைய தலைமுறையினரை, சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடக்கும் இளைய தலைமுறையினரை, அழகு நிலையங்களில் திரண்டு நிற்கும் இளையதலைமுறையினரை, திரையரங்குகளில் முதற்காட்சியில் கதாநாயகனுக்கு பல அடி கட்அவுட் வைத்து பாலபிஷேகம் செய்யும் தலைமுறையினரைப் பார்த்த கண்களுக்கு… அங்கவை போன்ற தங்கங்கள் தென்படுகையில், நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுகிறது, எம் தமிழ் இனி மெல்லச்சாகாது, தழைத்தோங்கி வளருமென…

கண்மணி அங்கவை, உன் வாசிப்பு உன் பெற்றோரால் அங்கீகரிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டு, மதிப்பெண்கள் என்ற மாயவலையில் உன்னைச் சிக்கவைத்துப் பணம் குவிக்கும் இயந்திரமாக உன்னை மாற்றாது போனதற்காக என் பேரன்பு அவர்களுக்கு…

நீ தேர்ந்தெடுத்த 6 நூல்களுமே உன் ரசிப்புத் தன்மையை, உன் இலக்கியத் தேடலை, உன் மனது நகரும் திசையை, உன் அறிவு நீட்சியை அடிக்கோடிட்டுக் காட்டி நிற்கின்றன எனச் சொன்னால் மிகையாகாது…

வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் “கையறு நதி “ பற்றி எழுதுகையில் நீ இப்படி எழுதுகிறாய் …

//வாழ்க்கை எனும் தண்டவாளம் எவ்வளவு மோசமாகப் பிறழ்வுண்டாலும், அதன்மீது பயணித்தாக வேண்டும். எங்கு அழைத்துச் செல்கிறதோ, எதைக் காண்பிக்கிறதோ, அதை எப்படி நாம் காண்கிறோமோ, எப்படிப் புரிந்து கொள்கிறோமோ, பார்த்துக் களித்துச் செல்ல வேண்டியதுதான். எப்படியானாலும் பயணித்தே ஆக வேண்டும் என்பதைத்தான் இந்தப் புத்தகம் உணர்த்துகின்றது//

எவ்வளவு கனமான வார்த்தைப் பிரயோகங்கள்! உளவியற் சிந்தனை நிறைந்த ஓர் ஞானியின் அடியொற்றிய காலடித் தடங்களின் அச்சுப் பிரதிகள்!

பிராய்டு கூறிய "முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும், உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு ஒரு தேரின் ஓட்டுநருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான உறவைப் போன்றது" என்ற வரிகள் நினைவிற்கு வருகின்றன.

தமிழ் மகன் அவர்களின் படைவீடு நூல் உன்னை ஈர்த்ததில் எனக்கு எந்த ஆச்சர்யமுமில்லை.. நாட்டின் மீதும் மொழியின் மீதும் தீராக் காதல் கொண்ட உன்னால் இந்த நூலை நேசிக்க இயலவில்லை என்றால் அதுதான் வியக்க வைக்கும். 

இந்தப் பற்றை நான் எப்படி அறிந்து கொண்டேன் தெரியுமா? இந்தப் புதினத்தின் கடைசி அத்தியாயம் படிக்கின்றபோது நீ இப்படி எழுதுகிறாய், 

//இந்தப் புதினத்தின் கடைசி அத்தியாயத்தைப் படிக்க மட்டும் எனக்கு ஒரு நாள் தேவைப்பட்டது. அந்தளவிற்குப் பதைபதைப்பை அது தந்தது. அவர்கள் வெல்லவில்லை, தமிழர்கள் தோற்றுப் போவார்கள் என்று தெரிந்தும் மனம் அதை ஏற்கவில்லை. தமிழர்கள் வீழ்ந்தார்கள், வீரம் குறைந்ததால் அல்ல; துரோகம் நிறைந்ததால்//

உலக சரித்திரத்தில் துரோகம் என்பது புதிதில்லையே கண்மணி?? இப்போதுதானே எழுத வந்திருக்கிறாய். இன்னும் நிறைய வாசிக்கையில், இன்னும் நிறைய எழுதுகையில் அதிகமாக அறிவாய், துரோகங்கள் குறித்து..

தென் அமெரிக்காவின் செவ்விந்திய “இன்கா“ பெரும் பழங்குடியினர் எப்படி ஸ்பானிஷ்காரர்களால் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை நேரம் கிடைக்கையில் படித்துப் பார்… 

யூதர்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்திய ஹிட்லர் ஆடிய கொலை வெறி ஆட்டத்தைப் பற்றிய புத்தகங்கள் படித்துப் பார்….

இயேசுகள் இல்லாவிட்டாலும், அற்ப காசுகளுக்குக் காட்டிக்கொடுக்கும் யூதாசுகள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்பதைப் படிக்கும் புத்தகங்களிலிருந்து உணர்வாய்..

இறுதியாக, 

சித்த மருத்துவத்தை ஆராயும் உனக்கு முத்து நாகு அண்ணனின் சுளுந்தீ நாவல் பிடித்துப் போகத்தான் போகும். பெரிய புதினத்தை உன்னளவிற்குச் சுருக்கி அதன் தன்மை மாறாமல், கதாப்பாத்திரங்களை விளக்கியது மிக அழகு..

ஒரு பத்தி எழுதுவதற்கு நான்கு ஐந்து மாதங்கள் யோசித்தேன் என அண்ணன் சொன்னது நினைவிற்கு வருகிறது. அத்தனை பென்னம் பெரிய உழைப்பே சுளுந்தீ. சித்த மருத்துவராக இந்த நூல் உன் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தையும் இடத்தையும் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை..

மருத்துவனின் குணத்தை மட்டுமல்ல, மருந்து அரைப்பவனின் குணத்தைக்கூட பேசியது திருக்குறள். 

தமிழர்களின் மரபுச்செல்வங்கள் மறைக்கப்படும்போது அல்லது அவர்களிடமிருந்து பிடுங்கப்படும் போது எழுந்த வரலாற்று வேதனையே சுளுந்தீ..

உலகெலாம் வெடி மருந்தை மூங்கிலிலும் காகிதத்திலும் சேர்த்து வான வேடிக்கைக்கோ போருக்கோ பயன்படுத்தும்போது அதை உலோகக் குப்பியில் அடைத்து, வெள்ளையருக்கு எதிரான போரில் உலகின் முதல் ஏவுகணையாய்ப் பயன்படுத்தியவன் திப்பு சுல்தான். அந்தப் போரின் ஓவியத்தை வைத்து அழகு பார்க்கிறது நாசா. அதை வெளிக் கொணர்ந்தவர் அப்துல் கலாம். அந்த வெடி மருந்தை ஆக்கித் தந்தவன் நம் தமிழ்ப்பாட்டன். நாம் மறந்ததை நாசா நினைவில் வைத்துள்ளது.

எங்கே தமிழினம் தன் மரபுகளை மறந்து விடுமோ என ஐயுறுகையில் அங்கவை போன்ற தளிர் வளைக்கரங்கள், இரும்புக் கரங்களாய் அதை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை இந்தப் புத்தகத்தின் வாயிலாய்த் தோன்றுகிறது..

தமிழ் கூறும் நல்லுலகே, இலக்கியப் பிதாமகர்களே, ஆன்றோர்களே, எங்கள் வீட்டுப் பெண்ணொருத்தி அங்கவை யாழிசை, "எழுத்துலகம்: அகமும் புறமும்" என்ற நூலை, தன் முதல் நூலாக இந்தத் தமிழ் உலகிற்குப் படைக்கிறாள். 

அவள் எழுத்து ஒவ்வொன்றும் அறிவின் கணைகள்; தமிழ் காக்கும் போர் முரசு. நாளைய உலகின் வழிகாட்டி..

கட்டியம் கூறி வரவேற்போம்.

வா மகளே வா!
தரணி போற்ற தமிழ் காப்பாய்!
தமிழர் நோய் தீர்ப்பாய்!
பரவட்டும் உன் புகழ் .

கட்டுரையாளர்:
லட்சுமி ஆர்.எஸ்,
எழுத்தாளர்&ஆசிரியர்,
மதுரை.

*
எழுத்துலகம்: அகமும் புறமும்,
அ.ம.அங்கவை யாழிசை,
முதல் பதிப்பு, சனவரி 2024,
அட்டை வடிவமைப்பு: 
தில்லை முரளி,
நூல் வடிவமைப்பு: பிரபாகர்,
பக்கங்கள்: 72,
விலை: உரூ 70/-
யாப்பு வெளியீடு, சென்னை.
அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.


வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

சோ.தர்மன் கவிதைகள்: தமிழ் இலக்கிய மரபின் நவீனப் புலப்பாடு - மகாராசன்


தமிழ் நிலத்தின் தெக்கத்திக் கரிசல் வட்டாரச் சமூக வாழ்வியலையும், அந்நிலத்தின் பண்பாட்டு வரைவியலையும் தமது கதைப் படைப்புகளின் வாயிலாக உயிர்ப்புடன் புலப்படுத்திக்கொண்டிருப்பவர் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்கள்.

வேளாண் மரபும், கூத்து மரபும், எழுத்து மரபும் சார்ந்த வாழ்வியல் பின்புலமானது திரு சோ.தர்மன் அவர்களைத் தமிழ் இலக்கியப் பேருலகில் மிகச் சிறந்த படைப்பாளியாக மிளிரச் செய்திருக்கிறது. தூர்வை, கூகை, சூல், வௌவால் தேசம், பதிமூனாவது மையவாடி போன்ற பெருங்கதைப் புனைவுகளின் வழியாகவும், பல்வேறு சிறுகதைகளின் வாயிலாகவும் தேர்ந்த கதைசொல்லியாகத் தமிழ்ச் சமூகத்தில் அறியப்பட்டிருக்கும் திரு சோ.தர்மன் அவர்கள், பல்வேறு நாடகப் பனுவல்களையும் எழுதியிருக்கிறார். வானொலி நாடகங்களாகவும் அவை ஒலிபரப்பாகி இருக்கின்றன. 

விவசாயி, பஞ்சாலைத் தொழிலாளி, தொழிற்சங்கவாதி, கதையாசிரியர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், பண்பாட்டு வழக்காற்று ஆய்வாளர் எனும் பன்முகப் பரிமாணங்களோடு திகழும் திரு சோ.தர்மன் அவர்கள், தமிழ் மரபின் சாயலை உள்வாங்கிய நவீனக் கவிதைகளையும் அவ்வப்போது எழுதியிருக்கிறார். அவ்வகையில், கவிஞர் எனும் பரிமாணத்தையும் உள்பொதித்து வைத்திருந்தவர்தான் திரு சோ.தர்மன் அவர்கள். 

தமிழில் அறியப்படும் பெரும்பாலான எழுத்தாளர்கள் கவிதை எனும் வடிவத்தில்தான் முதலில் எழுதத் தொடங்கியிருப்பார்கள். அதன்பிறகுதான் சிறுகதை, புதினம் எனப் புனைகதை வடிவங்களில் நுழைந்திருப்பார்கள். அவ்வாறுதான் திரு சோ.தர்மன் அவர்களும் எழுத்துலகிற்குள் நுழையும்போது கவிதை எனும் வடிவத்தில்தான் எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆனாலும், கவிதை வடிவத்தைக் காட்டிலும் கதை சொல்லல் வடிவம்தான் அவரது படைப்பாக்கங்களை வளப்படுத்துவதற்குத் தோதாக அமைந்திருக்கிறது எனக் கருதியிருக்கிறார். அதாவது, கவிதையில் சொல்ல முடியாததைச் சிறுகதையிலும், சிறுகதையில் சொல்ல முடியாததைப் பெருங்கதைகளிலும் சொல்வதற்கான விரிந்த பரப்பும் சுதந்திரமும் இருக்கின்ற காரணத்தால், கவிதைப் படைப்புகளைக் காட்டிலும் புனைகதைப் படைப்புகளை எழுதுவதற்குத்தான் முக்கியத்துவம் அளித்திருக்கிறார். 

இதைக் குறித்து அவர் கூறுகையில், "எல்லோரும்போல நானும் கவிதைகள்தான் எழுதிக் கொண்டிருந்தேன். இளம் வயது. அந்தநேரம் வயதுக்கேற்ற கவிதைகளைத்தான் எழுதினேன். கவிதை என்றால் என்ன என்று தெரியாமலேயே நான் கவிதை எழுதிக்கொண்டே இருந்தேன். இருபத்தைந்து வயதில் காதல் கவிதைகளும் இயற்கை வருணனைகளும்தான் எழுத முடிந்தது. என்னுடைய வாசிப்பு அதிகமாக அதிகமாக நான் நினைத்ததைக் கவிதையில் சொல்ல முடியாத ஒரு சூழல் உருவாகியது" என்கிறார். 

மேலும், சங்க இலக்கியங்கள் படித்த பிறகு நாம் எழுதினதெல்லாம் கவிதையா? என்று நினைக்கத் தோன்றியது. கவிதைகள் எவ்வளவு பொதுமைப்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றைக்கு, பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் வர்ணிப்பதுதான் கவிதையாக இருக்கிறது. அதனால்தான் நான் கவிதையை விட்டுவிட்டுக் கதைக்குள் சென்றேன். உரைநடைக்குள் போனால் நமக்கு விசாலமான இடம் கிடைக்கிறது. கவிதையில் சொல்வதைவிட சிறுகதையில் நாம் நிறையச் சொல்லலாம்" என்கிறார். 

தினமணி, தினக்கதிர், நீலக்குயில், ஆனந்த விகடன், அக்கு, ழகரம், சதங்கை போன்ற இதழ்களில் தொடக்க காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. ஆயினும், அக்காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் யாவும் அவரது கைவசத்தில்கூட இல்லாமல் போயின. புனைகதை எழுத்துகளில் தீவிரம் காட்டியபிறகு எப்போதாவது அவர் எழுதிய கவிதைகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் வந்திருக்கிறார். 

திரு சோ.தர்மன் அவர்களது புனைகதை எழுத்துகளையும், சமூக ஊடகங்களில் அவர் பதிவிடும் கருத்துகளையும், அவரது சொற்பொழிவுகளையும் ஒருசேரக் கவனிக்கையில், அவ்வப்போது அவர் எழுதிய கவிதைகளும் தனித்துவச் சாயல் கொண்ட புலப்பாட்டுத் தொனியையும், கவிதைப் பொருண்மையின் ஆழத்தையும் கொண்டிருப்பதை உணர முடியும்.

புனைகதை எழுத்துகளில் அவர் விவரிக்கும் கதைக்களமும் கதை மாந்தர்களும் வாழ்க்கைப்பாடுகளும்தான் அவரது கவிதைகளிலும் இடம்பெற்றிருக்கின்றன. அவர் வாழும் நிலமும் அவரது அனுபவங்களுமே அவரது கவிதையின் பாடுபொருளாய் விரிந்திருக்கின்றன. அவரது ஒவ்வொரு கதைகளையும் படித்த பிறகு ஏற்படுகிற வாசிப்பு உணர்வின் மனநிறைவும் அனுபவப்பாடுகளின் உள்வாங்கலும் அவரது கவிதைகளைப் படிக்கிறபோதும் ஏற்படுகின்றன. எனினும், கவிதை எனும் இலக்கிய வடிவத்திற்கான பொருண்மைச் செறிவும், மனித வாழ்வின் அனுபவப் போக்கைக் குறித்தத் தத்துவச் செறிவும் உள்ளீடாகப் பரவிக் கிடக்கின்றன.

திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகள் யாவற்றையும் ஒருசேர வாசிக்கும்போது, அக்கவிதைகள் யாவும் தமிழ்த் திணை இலக்கிய மரபின் நவீனக் கவிதை வடிவமாய் இருப்பதை அறிய முடியும். அவ்வகையில், தமிழ் இலக்கிய மரபின் வேரும் நவீன இலக்கியத்தின் துளிருமாய் அவரது கவிதைகள் மனித வாழ்வின் பச்சையத்தைப் பேசுகின்றன.

தமிழ்க் கலை இலக்கிய மரபானது, பன்மைத் தன்மைகளை உள்ளீடாகக் கொண்டிருக்கும் தனித்துவம் நிரம்பியது. மேலும், ஒற்றைத் தன்மையோ அல்லது ஒரு போக்குத் தன்மையோ கொண்டிராமல், பன்முக மரபுகளையும் செழிக்கச் செய்திருக்கும் நெடிய வரலாற்றையும் கொண்டிருப்பதாகும்.

நிலம் சார்ந்த பல்வேறு வட்டார மரபுகளையும், தொழில் வழக்காறுகளையும், அனுபவப்பாடுகள் நிரம்பிய மனித வாழ்வியலையும், பல்வேறு வகைப்பட்ட மனித உணர்வுகளையும், சமூகப் பண்பாட்டுக் கோலங்களையும் கலை இலக்கியப் படைப்புகளாக வடிவமைக்கும்போது, அவற்றின் உள்ளடக்கம், உள்ளடக்கத்தில் வருகிற மனித வாழ்வியல், வெளிப்பாட்டு வடிவம், படைப்புக் கண்ணோட்டம் போன்றவை இருவேறு புலப்பாட்டு நெறிகளை உருவாக்கியிருக்கின்றன. 

அதாவது, வாய்மொழி நிகழ்த்து வடிவங்களைக் கொண்ட நாட்டுப்புறப் படைப்பாக்க மரபுகளாகவும், எழுத்து வடிவங்களால் நிலைப்படுத்தப்பட்ட செவ்வியல் படைப்பாக்க மரபுகளாகவும் வடிவமைந்திருக்கின்றன. அவ்வகையில், வாய்மொழி மரபிலும் எழுத்து மரபிலும் செழித்து வளா்ந்து கொண்டிருக்கும் பாங்கை, தமிழ் கொண்டிருக்கிறது. 

இத்தகைய இருவேறு மரபுகளும் இணைகோட்டு மரபாகவும், கலை இலக்கியக் கோட்பாட்டு மரபாகவும்கூட செழுமையடைந்திருக்கின்றன. இத்தகைய இருவேறு மரபுகளைத்தான்

''நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம்''

என்கிறது தொல்காப்பியம். 

மேற்குறித்த சூத்திரத்திற்கு உரையெழுதும் இளம்பூரணர், "நாடக வழக்காவது சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். உலகியல் வழக்காவது உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது" எனக் கூறுகின்றார்.

மனித வாழ்வின் அகப்பாடுகளையும், மனிதரைச் சூழ்ந்திருக்கும் புறவுலகையும் புலப்படுத்துவதுதான் இலக்கியப் படைப்பின் மூலப்பொருள் ஆகும். இத்தகைய இலக்கியத்தைப் புனைவாகவும் புனைவுமொழியிலும் புலப்படுத்துவதை 'நாடக வழக்கு' என்பதாகக் கூறப்படுகிறது. இத்தகைய நாடக வழக்கானது செய்யுள் மொழியாகவும், பிற்காலத்தில் புனைவுமொழியாகவும் வடிவமைந்திருப்பதைக் குறிக்கிறது. 'உலகியல் வழக்கு' என்பது, மனித வாழ்வியலை உள்ளதை உள்ளபடியாகப் புலப்படுத்தும் நடப்பியல் தன்மையையும் பேச்சுவழக்கு மொழி வடிவத்தையும் குறிப்பதாகக் கருதலாம்.

மக்களின் வாழ்க்கையில் காணப்பெறும் பேச்சு வழக்கும், புனையப்படும் செய்யுள் வழக்கும் இலக்கியத்தில் பதிவாகின்றன. அதனால் இலக்கியத்தில் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் கலந்து காணப்பெறுகின்றன. இத்தகைய நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும் உருவாக்கப்படும் இலக்கியப் படைப்பாக்கத்தையே 'புலனெறி வழக்கம்' எனச் சுட்டுகின்றனர் தமிழ் இலக்கண மரபினர்.

புலம், புலன், புலனெறி, புலமை, புலவர், புலயர் போன்ற சொற்கள் நிலம், ஐம்புலன்கள், அறிவு போன்ற பொருண்மையைச் சுட்டக்கூடியவை. நிலம் சார்ந்த பின்புலத்தில் பெறப்பட்ட ஐம்புல நுகர்வைப் புலப்படுத்தும் மன அறிவே புலனெறி என்பதாகும். 

இத்தகைய அறிவால் படைக்கப்படும் இலக்கிய இலக்கணப் படைப்பாக்க நெறியே 'நூலறிவுப் புலம்' எனப்படுகிறது. நூலறிவுப் புலத்தை வளர்த்துக் கொண்டவரே புலவர். புலவர்களின் படைப்பாக்கத் திறமே புலமையாகும். அத்தகுப் புலமையால் படைக்கப்படும் இலக்கிய இலக்கணங்கள் யாவும் புலம் - புலன் என்பதாகும். அதனால்தான், ''புலன் நன்குணர்ந்த புலமையோரே'' எனத் தொல்காப்பியரும்,

''புலம் தொகுத்தோனே போக்கறு பனுவல்'' எனப் பனம்பரனாரும் சுட்டுகின்றனர்.

'புலன்' என்னும் இந்தச் சொல் இலக்கிய இலக்கண நூலறிவைக் குறிக்கும் அதேவேளையில், செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகவும் குறிக்கப்படுகிறது. ''சேரி மொழியாற் செவ்விதின் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் புலனென மொழிப புலனுணர்ந்தோரே'' என, எட்டுவகை இலக்கிய வனப்புகளுள் ஒன்றாகப் புலன் என்பதையும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

இந்த நூற்பாவின் முதல் சீரினைத் 'தெரிந்த' என்ற சொல்லாகப் பாடம் கொள்கிறார் இளம்பூரணர். 'தெரிந்த மொழியால்' என்று பாடங்கொண்டதைப் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் 'சேரி மொழியால்' என்றே பாடங்கொள்கின்றனர்.

இந்த நூற்பாவிற்கு உரையெழுதும் இளம்பூரணர், "வழக்கச் சொல்லினானே தொடுக்கப்பட்டு, ஆராய வேண்டாமல் பொருள் தோன்றுவது புலனென்னும் செய்யுள் என்று உரைக்கின்றார். அதேபோல, செவ்விதாகக் கூறி, ஆராய்ந்து காணாமைப் பொருள் தொடரானே தொடுத்துச் செய்வது புலனென்று சொல்லுவர் புலன் உணர்ந்தோர். அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யுளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன என்பது கண்டு கொள்க" என்று உரை விளக்கம் தருகின்றார் பேராசிரியர். இக்கருத்தை வழிமொழிந்தேதான் நச்சினார்க்கினியரின் உரைக் கருத்தும் அமைந்திருக்கிறது.

அதாவது, "செவ்விதாகக் கூறப்பட்டு, ஆராய்ந்து காணாமை, பொருள் தானே தோன்றச் செய்வது புலனென்று கூறுவார் அறிவறிந்தோர். அவை விளக்கத்தார் கூத்து முதலிய வெண்டுறைச் செய்யுளென்று கொள்க" என்று பேராசிரியரின் கருத்தை ஒட்டியே பொருள் உரைக்கின்றார் நச்சினார்க்கினியர்.

மேலும், "பலருக்கும் தெரிந்த வழக்குச் சொல்லினாலே செவ்விதாகத் தொடுக்கப்பட்டு, குறித்த பொருள் இதுவென ஆராய வேண்டாமல், தானே விளங்கத் தோன்றுவது புலன் என்னும் வனப்புடைய செய்யுளாம் என்பர் இலக்கண நூலுணர்ந்த ஆசிரியர்கள்" என்று ஆய்வுரை வழங்குகின்றார் க.வெள்ளைவாரணர்.

புலன் என்பதற்குத் தொல்காப்பியம் தருகிற கருத்தும், அந்நூற்பாவிற்கு உரையாசிரியர்கள் தந்திருக்கிற உரைக் கருத்துகளும் உலகியல் வழக்கான பேச்சு வழக்கைத்தான் குறிக்க வருகின்றன. அதிலும் குறிப்பாக, வட்டார வழக்கு, சிற்றூர்ப் பேச்சு வழக்கு, கிராமிய வழக்கு எனப்படுகிற நாட்டுப்புற வழக்கு என்பதைத்தான் குறிப்பதாகக் கருத முடிகிறது. அந்தவகையில், புலன் என்பது எல்லோர்க்கும் பொருள் தெரிந்த சொல்லால் அமைக்கப்படும் இலக்கியம் என்பதாகக் கொள்ளலாம். தமிழ்ச் சிற்றிலக்கிய வகையில் ஒன்றாகக் குறிக்கப்படும் பள்ளு நூல்கள் அனைத்தும் புலன் என்னும் வனப்பைச் சார்ந்த இலக்கியங்கள்தான். பெரும்பான்மை மக்கள் மொழியிலும் வட்டாரத் தன்மையிலும் அமைந்திருக்கும் நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் யாவுமே புலன் என்னும் இலக்கிய வனப்பின் விளைச்சல்கள்தான்.

மேலும், "புலனென்பது, இயற்சொல்லால் பொருள் தோன்றச் செய்யப்படும் பாட்டு" என்று யாப்பருங்கலவிருத்தி ஆசிரியர் அமிதசாகரர் மொழிகின்றார். அதாவது, உலகியல் வழக்கில் இயம்பும் சொற்களால் இயற்றப்படும் இலக்கிய வனப்பே புலன் என்பதாகும். அவ்வகையில், திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகள் யாவும் தமிழ் இலக்கிய மரபின் 'புலன்' எனும் வனப்பைச் சார்ந்தவையாக முகம் காட்டுகின்றன. அதாவது, தற்காலத்திய நவீனக் கவிதைகளில் பெரும்பான்மையாகத் தென்படுகிற இருண்மையோ, பூடகமோ, ஒளிவுமறைவோ, பாசாங்குத்தனமோ எதுவுமின்றி, மிக எளிமையான புலப்பாட்டு நெறிகளைக்கொண்ட நவீனக் கவிதைகளாகத்தான் அவரது கவிதைகள் வடிவமைந்திருக்கின்றன. 

எளிமை மிக இயல்பானது; நுட்பமானது; அழகானது. வாய்மொழி இலக்கிய மரபில் காணப்படுகிற பாட்டுகளும் கதைகளும் பழமொழிகளும் இன்ன பிற நாட்டுப்புற இலக்கிய வடிவங்கள் யாவுமே எளிமையானதும் நுட்பமானதுமான மொழிப் புலப்பாட்டையும் அழகியலையும் கொண்டிருப்பவை. அதேபோன்றுதான், திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகளும் வெள்ளந்தியாகவும் வாஞ்சையாகவும் எளிமையாகவும் அமைந்திருக்கின்றன. மேலும், திரு சோ.தர்மன் அவர்களின் கவிதை மொழியானது, தனித்துவக் கவிதை அழகியல் வடிவத்தையும் நுட்பமான பொருண்மை ஆழத்தையும் பெற்றிருக்கிறது. 

தொல்காப்பியம் குறிப்பிடுகிற 'நாடக வழக்கு' என்பதற்குப் புனைவுச் செய்யுள் அல்லது புனைவுமொழி இலக்கியம் என்பதான பொருளில்தான் உரையாசிரியர்கள் எடுத்துரைக்கின்றனர். நாடக வழக்கு என்பதை, நாடக நிகழ்த்து வடிவங்களில் இடம்பெறுகிற 'உரையாடல் பாங்கு' அல்லது 'உரையாடல் வடிவம்' என்பதாகவும் பொருள் கொள்ள வாய்ப்புண்டு. உலகியல் வழக்கு என்பதற்கும், புலன் என்பதற்கும் விளக்கமளிக்கும் உரையாசிரியர்கள், அதற்குச் சான்றாக 'விளக்கத்தார் கூத்து' எனும் நிகழ்த்துப் பனுவல் ஒன்றைச் சுட்டுகின்றனர். பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிடும் விளக்கத்தார் கூத்து என்பது, அவர்கள் காலத்தில் வழக்கிலிருந்த நாடகச் செய்யுள் நூலாக இருந்திருக்கிறது. அக்கூத்து நூல் எல்லோர்க்கும் பொருள் இனிது புலனாகியிருக்கிறது.  

திரு சோ.தர்மன் அவர்களது பெரும்பாலான கவிதைகள், நாடகக்கலை மரபிலும் கூத்துக் கலை மரபிலும் இடம்பெறுகிற உரையாடல் பாங்கு வடிவத்திலேயே அமைந்திருக்கின்றன. கூத்து மற்றும் நாடக நிகழ்த்து மரபில் இடம்பெறுகிற நடிப்புக் கூறுகள் நிகழ்த்துக் கலை வடிவத்தையும், அவற்றில் இடம்பெறுகிற உரையாடல் பகுதிகள் இலக்கியக் கலை வடிவத்தையும் ஒருசேரக் கொண்டிருப்பவை. நாடக மற்றும் கூத்துக் கலை மரபில் இடம்பெறுகிற கதைமாந்தர்களின் உரையாடல் பாங்கு வடிவத்தை இலக்கியப் படைப்பாக்கத்தில் பயன்படுத்துகிறபோது இலக்கியப் பனுவலும் ஓர் நிகழ்த்துப் பனுவலாய் வடிவம் கொள்கிறது. அதாவது, கவிதைக்குள் இடம்பெறும் உரையாடல்கள், கவிதை எனும் இலக்கியப் பனுவலை நிகழ்த்துப் பனுவலாகவும் மாற்றிவிடுகின்றன. 

திரு சோ.தர்மன் அவர்களது பெரும்பாலான கவிதைகள், கவிதை எனும் இலக்கியப் பனுவலாகவும் இருக்கின்றன; கவிதைகளுக்குள் இடம்பெறும் உரையாடல்கள் நிறைந்த நிகழ்த்துப் பனுவலாகவும் அமைந்திருக்கின்றன. அவரது இளவயதுக் காலகட்டத்தில் அமையப்பெற்ற கூத்து மரபின் பின்புலச் சூழல்தான், கவிதைகளுக்குள் உரையாடல் பாங்கு இடம்பெற்றதற்கான காரணமாக அமைந்திருக்கக் கூடும்.

வேளாண் தொழில் மரபோடு கூத்து மரபும் ஊடாடிக் கிடந்த தமது குடும்பப் பின்புலம் குறித்து அவர் கூறும் பகுதிகள் இங்கு கவனிக்கத்தக்கவை. "கூத்துக் கலையைப் பார்க்க எனது பதின்மூன்று வயதுவரை வாய்ப்புக் கிடைத்துக் கொண்டே இருந்தது. எனது தந்தை என்னை சிறுவயதிலேயே கூத்து நடக்கும் இடத்திற்கெல்லாம் அழைத்துக்கொண்டு போய் நடிப்பார். எல்லா ஊர்களுக்கும் போவார்கள். அவர்கள் ஆடும் ஆட்டம், காட்சி, பாடல்கள் எல்லாமே சேர்ந்துதான் எனக்குள் வாசிப்பிற்கு உண்டான விதை விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களின் கூத்துக் கலையை எனது பதின்மூன்றாவது வயதிற்குப்பின் நிறுத்தி விட்டார்கள். அப்போது என் மனதிற்குள் ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது. அந்த வெற்றிடம்தான் என்னை வாசிப்பிற்குள் நுழைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த உலகத்தில் யாருக்குமே கிடைக்காத பாக்கியம் எனக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம். நான் ராமனின் தோள்களில் பயணப்பட்டிருக்கேன். சீதையின் மடியில் படுத்து உறங்கியிருக்கேன். அனுமனின் விகார முகமும் நீண்ட வாலும், மாயமான் மாரீசனின் கொம்புகளும் என் விளையாட்டுப் பொருட்கள். ஒயில் கும்மி என்று சொல்லக்கூடிய ராமாயணக் கூத்தில் என் அய்யாதான் ராமர் வேசம். என் மாமா லட்சுமணன் வேசம். சின்னைய்யா சீதை வேசம். இவர்கள் தூக்கி விளையாடும் செல்லப்பிள்ளையாய் நான். கடைசிவரை கூத்தைக் கடவுளாகப் போற்றி ராமனாகவே வாழ்ந்து மறைந்தவர் என் அய்யா. அவர் என்னுள் விதைத்துச் சென்ற கதைகளையே நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கேன். 

வெற்றிலையை இரண்டாக மடித்து, காம்பு கிள்ளி, நரம்பை உரித்து, நான்காய் மடித்து, அண்ணாந்து வாயில் வைத்தவுடன் பீமனும் கீசகனும் யுத்தம் செய்யும் கதையை எங்கள் அய்யா சொல்லும் அழகே அழகு" என்கிறார்.

நாடகம் மற்றும் கூத்துக் கலை மரபில் இடம்பெறும் உரையாடல் பாங்கு, சங்க காலத் திணை இலக்கிய மரபிலும் காணக்கூடிய வடிவமாக இருக்கின்றது. அத்தகைய உரையாடல் பாங்கைத் தான் 'கூற்று முறை' எனக் குறிப்பிடுகின்றனர். சங்க கால அகப்பொருள் சார்ந்த திணைநிலைக் கவிதைகள் யாவும் கதை மாந்தர் கூற்றுகளாகவே அமைந்திருக்கும் பாங்குடன் திகழ்கின்றன.

உரையாடல் பாங்கு அல்லது கூற்று முறைப் பாங்கு, கவிதைப் புலப்பாட்டின் ஓர் உத்தி முறையாகவே பயின்று வந்திருக்கிறது. கவிதைப் படைப்பின் பொருண்மையை விளக்கப்படுத்தும் வகையில் கதை மாந்தர் கூற்றுகளாகவே தமிழ் மரபின் அகத்திணைக் கவிதைகள் அமைந்திருக்கின்றன. தலைவன், தலைவி, தோழி, செவிலி, பார்ப்பான், பாங்கன், பாணண், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர், ஆகிய பன்னிரு மாந்தர்கள் அகப்பொருள் கூற்று நிகழ்த்துதற்கு உரியர் என்கிறது தொல்காப்பியம். மேற்குறித்த கதை மாந்தர்கள் கூறுவது போலவே சங்க கால அகப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன.

அகப்பொருள் செய்திகளைக் கதை மாந்தர் கூற்றுமுறையில் அமைத்துப் பாடும்போது, 'ஒருவர் கூற்று' முறையில் (monologue) அமைத்துப் பாடுதல், 'இருவர் தம்முள் மாறி மாறி உரையாடும்' முறையில் (Dialogue) அமைத்துப் பாடுதல் எனும் இருவகைக் கூற்று முறையில் அக்காலப் புலவர்கள் பாடியிருக்கின்றனர். ஓர் அழகிய நாடகக் காட்சியைக் கவிதைக்குள் கொண்டு வந்து நிறுத்தும்படியாகத்தான் கூற்று முறைகளும் உரையாடல் பாங்கும் அமைந்திருக்கின்றன. 

ஒருவரோ இருவரோ அல்லது பலரோ கூறுவதுபோல கவிதைக்குள் கூற்றுகள் இடம்பெறலாம். எனினும், இருவரோ அல்லது ஒருவரோ கூறுவதுபோல கவிதை அமைவதும், குறைந்தளவு ஒருவரது கூற்றாவது அகப்பொருள் கவிதையில் அமைவதும் சிறப்பாகக் கருதப்பட்டிருக்கிறது. சங்க கால அகப்பாடல்கள் பலவும் 'ஒருவர் கூற்று' முறையில் அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய ஒரு கூற்று முறையில் அமைந்த கவிதைகளை ''நாடகத் தனிக்கூற்று வகைப் பாடல்கள் (Dramatic Monologues)" என்கிறார் அறிஞர் மு.வரதராசனார்.

சங்க கால அகப்பொருள் இலக்கியப் புலப்பாட்டு நெறியான கூற்று முறை உரையாடல் பாங்கிலான கவிதைகளின் நவீன வடிவமாகத்தான் திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகளும் அமைந்திருக்கின்றன. அகப்பொருளை மட்டுமல்ல, சமூக வாழ்வின் புறப்பொருளையும்கூட கூற்று முறை உரையாடல் பாங்கிலான கவிதை வடிவத்தில் புலப்படுத்தியிருக்கிறார். இத்தகையப் புலப்பாட்டு நெறிதான் இவரது கவிதைகளின் தனித்துவ வடிவமாக அமைந்திருப்பது நோக்கத்தக்கதாகும்.

நாடக உரையாடல் பாங்கில் அமைந்திருக்கும் அகத்திணைக் கவிதைகளின் குறிப்பான தன்மை  

"சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்" என்பதாகும். அதாவது, கவிதையை வாசிக்கிற ஒருவர் இந்தக் கவிதை இன்னாருடைய அனுபவம்; இன்னாரைப் பற்றியது என்பதான தரவுகளைப் பெற்றுவிடக் கூடாது. மாறாக, கவிதையில் பதியம் போட்ட உணர்வுகளை வாசகரும் உள்வாங்கி அசைபோட்டுக் கொள்கிற வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளமுடியும். இதையே 'அகப்பொருள் மரபு' என்கிறார்கள். அகப்பொருள் மரபில் கவிதைகளைப் பின்னுகிறபோது பல்வேறு உத்திகளைப் படைப்பாளர்கள் கையாண்டுள்ளனர்.  

அகப்பொருள் மரபிற்கெனச் சில இலக்கிய உத்திகளை இலக்கண நூலாகிய தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. சங்ககால அகத்திணைக் கவிதைகள் வேறு வேறு பொருள்கோடலுக்கும் வழிவகுப்பதாக 'அகப்பொருள் உத்திகள்' அமைந்திருக்கின்றன. அவற்றுள் 'உள்ளுறை' மற்றும் 'இறைச்சி' ஆகியன குறிப்பிடத்தக்கவை.

"உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிக" எனச் சொல்வது உள்ளுறை உத்தி. அதேபோல,

"இறைச்சிதானே பொருட் புறத்ததுவே" எனவும் சுட்டுகிறது தொல்காப்பியம். அதாவது, கவிதையின் நேரடிப் பொருள் என ஒன்று இருக்கும். அக்கவிதைவழிப் பெற்றுக்கொள்கிற மறைபொருள் வேறொன்றாக அமைந்திருக்கும். பொதுவாகவே சில சொற்கள் மேலோட்டமான பொருளையும் (Surface meaning) உள்ளீடான பொருளையும் (Deep Meaning) கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அகத்திணைக் கவிதைகள் பெரும்பாலும் வேறொன்றைச் சொல்லி, குறிப்பானதை விளக்கி நிற்கும் நுட்பம் கொண்டவை. இந்த இலக்கிய நுட்பத்திற்குத் துணை செய்யும் வகையிலே 'முதற்பொருள்' எனப்பெறும் 'நிலங்களும் பொழுதுகளும்' கவிதையில் பயின்று வரும். அதேபோல, நிலத்திலே காணலாகும் உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களும் பரவி நிற்கும். இதைக் 'கருப்பொருள்' என்கிறார்கள். ஆக, முதற்பொருளும் கருப்பொருளும் இணைந்த 'இயற்கைப் பின்னணி' அகத்திணைக் கவிதைகளுக்கு உயிர் கொடுப்பதாக அமைந்திருக்கிறது.  

இயற்கைப் பின்னணி மூலமாகக் கவிதை செதுக்கி, மனிதர்க்கு உரித்தான செய்தியைச் சொல்கிறபோது 'உரிப்பொருள்' என்றாகிறது. ஆகக்கூடி, சங்க காலத்திய அகத்திணைக் கவிதைகள் யாவும் அய்ந்துவகை உரிப்பொருள்களைத் தன்வயம் கொண்டிருக்கின்றன. அக்கவிதைகள் கட்டியெழுப்பிய சொல்லாடல்களைக் கடந்து ஊடிழையாடிப் பார்க்கும்போது கவிதையின் நேரடிப் பொருளிலிருந்து வேறொன்றைப் புரிந்து கொள்ள முடியும்.

திரு சோ.தர்மன் அவர்களது கவிதைகள் நவீன வாழ்வின் போக்குகளையும், மனித அனுபவங்களையும்தான் பேசுபொருளாக முன்வைத்திருக்கின்றன. கரிசல் வட்டாரத்தின் நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாகக் கொண்டு, அவ்வட்டாரத்தின் உயிர்ப் பொருட்களையும் உயிரற்ற பொருட்களையும் கருப்பொருளாகக் கொண்டு, அவற்றின் மூலமாக ஒவ்வொரு கவிதையின் வாயிலாகவும் ஓர் உரிப்பொருளைப் புலப்படுத்துகிறார் திரு சோ.தர்மன்.

தாம் வாழும் வட்டார நிலம், குளங்கள், கண்மாய்கள், நீர்நிலைகளில் வாழும் மீன்கள் மற்றும் பறவைகள், வெள்ளாமைப் பயிர்கள், குளக்கரை மரங்கள் மற்றும் தெய்வங்கள், தம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் யாவற்றோடும் உரையாடும் தொனியில் கூற்று முறையில் அமைந்த உரையாடல் பாங்கைத் தம் கவிதைகள் முழுக்கக் கையாண்டிருக்கிறார். 

நாடகக் காட்சியாய் விரியும் அவரது கவிதைகள் நவீனக் கவிதைக்கான படிமங்களைக் காட்டுகின்றன. அக்கவிதைகளில் பொதிந்திருக்கும் உள்ளீடான பொருண்மைகள் குறியீட்டுத் தன்மையுடனும் நவீனம் பெற்றிருக்கின்றன. அதாவது, திரு சோ.தர்மன் அவர்களது 

கவிதைகள் உரையாடல் பாங்கிலான கூற்றுகளையும், காட்சிப் படிமங்களையும், குறியீட்டுப் பொருண்மைகளையும் கொண்ட கவிதை வடிவத்துக்குள் நவீன வாழ்வின் போக்கைக் குறித்த எளிய தத்துவம் போல் போதித்துச் செல்கின்கின்றன.

அகம் சார்ந்ததாகவோ அல்லது புறம் சார்ந்ததாகவோ அல்லது எழுத்து மரபு சார்ந்ததாகவோ அல்லது வாய்மொழி மரபு சார்ந்ததாகவோ உருவாக்கம் பெறுகிற கவிதை அல்லது "இலக்கியம் என்பது, எந்தக் காலத்திலும் நுாற்றுக்கு நுாறு வீதம் நேரடியான சமுதாயச் சித்திரம் அன்று. புற உலகை அதாவது, காட்சிகளையும் அனுபவங்களையும் எழுத்தாளர் அப்படியே சொல்லில் வடிப்பதில்லை. அனுபவ முழுமையிலிருந்து தற்செயலான, மேம்போக்கான அம்சங்களையெல்லாம் நீக்கிவிட்டு, அடிப்படையான சாராம்சத்தை அக உணா்வில் உரைத்து வகைமாதிரிக்குப் பொருத்தமான வடிவத்தில் உருவாக்குகின்றனர். இன்னொரு விதமாய்க் கூறுவதாயின், ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்கள் புறநிலைப்பட்ட எதார்த்தத்தை அகநிலைப்பட்ட எதார்த்தமாக மாற்றியமைக்கின்றனா். 

மனிதனின் சமூக வாழ்க்கையே கலை இலக்கியம் அனைத்திற்கும் ஒரே அடிப்படையாய் இருப்பினும், அவை உருவாக்கிக் காட்டும் வாழ்க்கை கண்ணாரக் காணும் வாழ்க்கையைவிட வளமிக்கதாயும் உயிர்த் துடிப்புள்ளதாயும் அமைந்து விடுகிறது. வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் உள்ள சிறப்பான உறவு இதுதான்" என, இலக்கியத் திறனாய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். கவிதை உள்ளிட்ட எந்தவோர் இலக்கிப் படைப்புக்கும் உருவாக்கத்திற்கும் உள்ள நெய்திடும் உறவு இதுதான்.  

ஆக, அகம் சார்ந்தோ அல்லது புறம் சார்ந்தோ உருவாக்கம் பெறுகிற கவிதை அல்லது இலக்கியமானது வாழ்வியல் சார்ந்தது எனினும், நடப்பியல் சார்ந்தோ அல்லது புனைவு சார்ந்தோ வெளிப்படுத்தப்படுவது என்றாலும், மொழியால் ஒப்பனை பெறுகிற கலை வடிவமாகவே முகம் காட்டுகிறது எனலாம்.  

பெருமரத்தின் தளிர் நுனிக்கும், மண்ணுக்குள் புதைந்திருக்கும் வோ்களின் நுனி முடிச்சுகளுக்கும் ஒரு தொடுப்பு இருப்பதைப்போல, மரபுக்கும் நவீனத்திற்கும் தொடுப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் மொழியே வளப்பமுடன் செழிக்கும். அவ்வகையில், தமிழ் இலக்கிய மரபுக்கும் நவீனத்திற்கும் ஊடாடிப் பயணிக்கும் வாய்ப்பைத் தருவதாக திரு சோ.தர்மன் கவிதைகள் அமைந்திருக்கின்றன.

எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களது கதைப் படைப்புகளில் விரிந்து கிடக்கும் படைப்புலக மனிதர்களோடு வாழ்ந்திருக்கிறேன். அவரது கலை, இலக்கியம், சமூகச் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்தும் படித்தும் வருகிறேன். அவரது எழுத்துகள் எமக்கான படைப்புலக் கிளர்ச்சியையும் வாசிப்பின் நிறைவையும் தருகின்ற மிக நெருக்கமான எழுத்துகள். அவற்றைப் போலவே, அவரது கவிதைகளும் அவரது படைப்புப் பரிமாணத்தைக் காட்டுவதோடு தனித்துவக் கவிதை அழகியலையும் கொண்டிருப்பவை. 

திரு. சோ.தர்மன் அவர்களது புனைகதைப் படைப்புகள் நூல்களாக வந்திருப்பதைப் போலவே, அவரது கவிதைகளும் நூலாக வெளிவரவேண்டும் எனும் பெருவிருப்பத்தை அவரிடம் தெரிவித்தபோது, "அதெல்லாம் கவிதையா என்பது தெரியாது. கவிதையில் பெரிதாக நாட்டமில்லை" என, கவிதை நூல் வெளியீடு பற்றிய தமது தயக்கத்தைத் தெரிவித்தார். எனினும், அவரது கவிதைகள் நூலாக வெளிவரவேண்டும் எனும் எமது பிடிவாதப் பேரன்பையும் வேண்டுகோளையும் தயக்கத்துடனே ஏற்றுக்கொண்டார். 

அவர் எழுதிய கவிதைகள் யாவற்றையும் தெரிவுசெய்து, செப்பமாக்கித் தொகுத்து, கவிதை நூல் வடிவத்தில் அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதைப் பார்த்த பிறகுதான், கவிதைகள் யாவற்றையும் ஒருசேரக் கண்ட பிறகுதான் முழு மனநிறைவோடு தமது கவிதைகள் நூலாக்கம் பெறுவதற்கான இசைவைத் தந்தார் திரு சோ.தர்மன். 

சோ.தர்மன் கவிதைகள் எனும் இந்நூலை, தெரிவும் தொகுப்பும் செய்து பதிப்பித்துக் கொண்டுவருவதற்குக் கனிவுடன் இசைவளித்த திரு சோ.தர்மன் அவர்களுக்குப் பேரன்பையும் நன்றியையும் உரித்தாக்கி மகிழ்கிறேன்.

இந்நூலை, யாப்பு வெளியீடாகப் பதிப்பித்திருக்கும் திரு செந்தில் வரதவேல் அவர்களுக்கும், இந்நூலினை அழகுடன் வடிவமைப்பு செய்து தந்த திரு பிரபாகர் அவர்களுக்கும் மிக்க நன்றியும் அன்பும்.

திரு சோ.தர்மன் அவர்களது புனைகதை எழுத்துகளைக் கொண்டாடும் தமிழ்கூறும் நல்லுலகம், அவரது கவிதைகளையும் கொண்டாடும்; கொண்டாட வேண்டும் எனும் பெருவேட்கையோடு மட்டுமல்ல, அவரது கவிதைப் படைப்பாக்க ஆளுமையையும் தமிழ்ச் சமூகத்திற்கு அடையாளப்படுத்த வேண்டும் எனும் கடமை உணர்வோடு இந்நூலைக் கொண்டுவருவதில் நிறைவும் மகிழ்வும் அடைகிறேன்.

தோழமையுடன்,
மகாராசன்.

*

சோ.தர்மன் கவிதைகள்,
தெரிவும் தொகுப்பும்: 
மகாராசன்,
முதல் பதிப்பு: சனவரி 2024,
பக்கங்கள்: 117,
விலை: உரூ 120/-
வெளியீடு: 
யாப்பு வெளியீடு, சென்னை.

அஞ்சலில் நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
90805 14506.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

நிலத்திலிருந்து அந்நியமாக்கப்படும் ஆத்மாக்களின் வலிமொழி: மகாராசன்

 

மேற்கு வங்கம், சாந்தி நிகேதனில் முனைவர் பட்ட ஆய்வுப்பணி மேற்கொண்டிருப்பவர் சத்தீஸ்வரன் அவர்கள். வங்க மொழி நூல்களைத் தமிழிலும், தமிழ் நூல்களை வங்க மொழியிலும் மொழியாக்கம் செய்யும் அரும்பணியையும் அவர் செய்து கொண்டு வருகிறார்.

படைப்பாக்கத்திலும் தமது தனித்துவத்தை அடையாளப்படுத்தும் வகையில் 'தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்' எனும் கவிதைத் தொகுப்பையும் கொண்டு வந்திருக்கிறார்.

காடு கரைகளில் சுற்றித் திரிந்து, ஆடு மாடுகளை மேய்த்துத் திரும்பி, வெயிலேறிய வெக்கையில் வியர்த்துக் கிடந்து, கரிசல் தூசுகளோடும் சம்சாரி மனிதர்களோடும் உறவாடித் தளிர்த்திருந்த தெக்கத்தி ஆத்மாக்களின் வேர்த்தடங்களைக் கவிதை மொழியில் உயிர்ப்பித்திருக்கிறார் சத்தீஸ்வரன் அவர்கள்.

வாழ்ந்த வாழ்க்கையையும், வாழ்கிற மிச்ச வாழ்வையும் பாசாங்கும் பூடகமும் ஒப்பனையும் இல்லாமல் மொழியில் தூவிடும்போது துயர்மிகு சொற்களும் அழகியலாய்ப் படைப்பாக்கம் செய்துகொள்ளும் என்பதற்கு சத்தீஸ்வரன் கவிதைகள் மிகச்சிறந்த சான்றுகளாகும்.

வெறுமையும் வெயிலும் மண்டிய ஓரக்காட்டுத் திசையின் நிலப்பரப்பான திருச்சுழி, கமுதி, வீரசோழன், நரிக்குடி, காரியாபட்டி வட்டாரத்தின் நில வரைவியலும் மனித வாழ்வும் தமிழ்ப் படைப்பு வெளியில் சொல்லிக் கொள்ளும்படியாகப் பதிவாகியிருக்கவில்லை. இந்நிலையில், அந்த வட்டாரத்தின் நிலத்தையும் அந்நிலத்தின் தற்போதைய இருப்பையும், அது சார்ந்த மனித வாழ்வின் அசலையும் கொஞ்சமும் பிசசாமல் கவிதைகளுக்குள் கொண்டு வந்து மொழியால் ஆன ஆவணமாய் ஆக்கிவிட்டிருக்கிறார் சத்தீஸ்வரன்.

தமிழ்ப் படைப்பாக்க மரபில் முதல் பொருள் எனப்படுகிற நிலமும் பொழுதும் மிக முக்கியமானவை. இந்த நிலமும் பொழுதும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறு வேறு தன்மைகளைக் கொண்டிருப்பவை. முதல் பொருளான நிலத்தில் காண்பவைதான் கருப்பொருட்கள். நிலமும் கருப்பொருளும்தான் மனித வாழ்வின் உரிப்பொருளை வடிவமைக்கின்றன. அவ்வகையில், தமது வட்டாரத்தின் முதல் பொருளையும் கருப்பொருளையும் உரிப்பொருளையும் சமகாலச் சூழலின் தன்மையோடு படைப்பாக்கம் செய்திருக்கிறார் சத்தீஸ்வரன்.

தம்மைச் சுற்றிக் கிடக்கும் ஒரு வட்டார நிலப்பரப்பில் வாழ்வோரின் மனித உள்ளுணர்வுகள், அந்த வட்டார நிலத்தின் மடியிலேதான் தவிப்பாறத் தவிக்கும். சத்தீஸ்வரனின் ஆகப்பெரும்பாலான கவிதைகள், அவரை உயிர்ப்பித்திருந்த நிலத்தின் மீதான வாழ்வின் ஏக்கத்தையும், அந்நிலத்தின் மீதான பற்றுக்கோட்டை விட்டுவிடக் கூடாது எனும் தவிப்பையும், வாழ்ந்திருந்த அந்த நிலம் மிச்சம் மீதி எதுவுமில்லாமல் சிதைக்கப்படுவதைக் கண்டு பீறீடும் கோபத்தையும், செய்வதறியாது நிற்கும் கையறு நிலையையும் புலப்படுத்தும் பாங்கில் தனித்துவத்தைக் காட்டுகின்றன.

மிகப் பருண்மையான நிலப்பரப்பில் காணலாகும் மிக நுண்ணிய கூறுகளும், கண்டும் காணாது தனித்திருக்கும் நிலத்தின் பன்மைக் கோலங்களை அடையாளப்படுத்துவதில் விரிகின்ற காட்சிப் படிமங்களும், நிலத்திற்கும் அவருக்குமிருக்கிற மிக நெருக்கமான உறவும் ஊடாட்டமும் புழுதிக் காட்டின் நிறத்தோடும் மணத்தோடும் மொழிவழியாய்க் காண்பிக்கின்றன.

தமது வட்டார நிலத்தின் உயிர்ப்பான வாகுவை, கவிதைக்குள் பாவுகிற முயற்சியில் அவரது வாழ்வும் மொழியும் மிக இலகுவாகத் துணை நிற்கின்றன. கவிதைகள் வழியாகவும் ஒரு வட்டார நிலத்தின் வரைவியலை அசலாகக் காட்சிப்படுத்திக் காண்பிக்க இயலும் என்பதைத் தமது தொகுப்பின் மூலம் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார் சத்தீஸ்வரன்.

மிச்ச சொச்சமாய்க் கைவசமிருக்கும் பூர்வீக நிலத்தை இழந்து, அந்நிலத்திலிருந்து மெல்ல மெல்ல அந்நியப்படுத்தப்படும் ஆத்மாக்களின் வலிமொழியாகத்தான் சத்தீஸ்வரனின் 'தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்' அமைந்திருக்கின்றன. 

"மழை மேகம் 
கூடும் காலம் தேடியலைந்து நம்பிக்கையின் 
கடைசித்துளியும் வற்றிப்போய் உயிரலைந்த நிலமெல்லாம் விலைசொல்லும் நிலைவந்து மேய்ச்சல் நிலம் தொலைத்த வெள்ளாட்டங்குட்டிகளை
போன விலைக்கு விற்றுவிட்டு பிழைப்பு வேண்டி நகரேகும் வழியில் ஒதுங்க 
இடமற்றத் தவிப்பின் மீதேறி பொழிந்து தள்ளுமிதை
பொல்லாத வானென்று சொல்லீரோ ஊரீரே…! "

"விளைச்சல் மறந்து 
காந்தும் மண்ணில் 
வெறும் வயிற்றில் 
வேகும் பசியாய் 
வெயில் தின்று வெந்து கிடக்கும் குண்டாற்று மணற்பரப்பு மண்ணின் துயர்கள் 
முள்ளாய் மாறி 
காடு கரையெல்லாம் 
கருவேல மரங்கள் 
வெக்கையும் வேதனையும் உரிப்பொருளாக வெந்து 
கறுத்த கரிசல் மண்ணில் தோண்டித் தோண்டி கற்கள் நட்டும் மண்காத்து நிற்கின்றன இன்னும் சில கோவணமிழந்த ஐயனார்சாமிகள்…"

எங்கோ தூரதேசம் தேடி
ஊரைப் புதைத்துவிட்டுப் போனதனால்
உல்லாங்குருவிகளின் 
ஓலம் கேட்டு
ஓடிவர நாதியில்லை.
பாழுங்கிணற்றின் படிக்கல்லருகே
இற்றுவிழக் காத்திருக்கும் மரக்கிளையில் கயிறு கட்டித் தொங்கிக்கொண்டிருப்பவனின்
காய்ப்பேறிய கைகளில்
இன்னமும்கூட
மிச்சமிருக்கலாம் ஒருபிடி மண்."

"கரிச்சான்களின் சத்தங்கூட அத்துப்போன கரிசக்காட்டின் செத்த மண்ணில் வெள்ளாமையத்து 
புதர் மண்டிக்கிடக்கும் சீமைக்கருவேலை 
ஒரு அசப்பில் 
பரட்டப் புளியமரத்தையோ கடனுக்கு அஞ்சித் தொங்கிய தொத்த சம்சாரியையோ நினைவூட்டியபடி இருக்கலாம்.
மிச்சமிருக்கும் உசுருகளை நியாபகம் வைத்துக் கொள்ள 
இனி எதுக்கும் ஏலாது தோட்டந்தொரவு வித்து விலாசமத்துப் போய் 
ஏதோ ஒரு நகரத்து வீதியில் நாறிக் கிடக்கிலாம் 
நம் பிள்ளைகளின் பிழைப்பு."

"முச்சந்திச் சிலையென விறைத்துக் கிடக்கும் 
இப்பெரு நகரத்தின் 
ரேகைகளை அழித்து 
சாணி மொழுகிய வாசல்களின் பூசணிப்பூ வாசம் சுமந்து வைக்கோல் போர்களின் மேலெழும்பி 
வியர்வை படிந்த 
புழுதி கரைத்து 
அப்பாவின் கோவணம் 
நனைந்து சொட்ட வார்க்காரத்தோப்பில் 
மின்னல் வெட்டி ஈரம் வற்றிய நெகிழி நெஞ்சுக்குள் உயிர்ப்பூட்டிச் செல்லும் இம்மழை எனது சொந்த ஊரிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்."

இப்படியாக, பூர்வீக நிலத்திற்கும் பூர்வீக மனத்திற்கும் இடையிலான நுண் உணர்வுகளும், பூர்வீக நிலத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட அலைந்துழலும் வாழ்வின் பாடுகளும் சத்தீஸ்வரனின் கவிதைமொழிக்குள் உலவித் திரிகின்றன. குறிப்பாக, பூர்வீக நிலத்தின் கிராமிய வாழ்வின் பாடுகளும், புலம்பெயர்தலால் நேர்ந்த நகர வாழ்வின் பாடுகளும் சத்தீஸ்வரனின் கவிதைப் பாடுபொருளாய் விரிந்திருக்கின்றன. இரு வேறு நிலத்தின் வாழ்க்கைப் பாடுகள் தந்திருக்கும் மனித உள்ளுணர்வுகள் தனிமைப்பட்டும் துயர் நிரம்பியும் இருப்பதைத்தான் அவரது கவிதைச் சொற்கள் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிகிறது.

தமது முதல் கவிதைத் தொகுப்பின் வாயிலாகவே பக்குவமான படைப்பாக்க மொழியையும் புலப்பாட்டு நெறியையும் வெளிப்படுத்தியிருக்கும் சத்தீஸ்வரன், தமது வட்டார நிலத்தின் வரைவியலை அடுத்தடுத்த படைப்பாக்கங்கள் வாயிலாக இன்னும் வளப்படுத்துவார் எனும் பெரு நம்பிக்கையை அவரது கவிதைகள் தந்திருக்கின்றன. தமது நிலத்தைக் கவிதை மொழிக்குள் உயிர்ப்பித்திருக்கும் சத்தீஸ்வரன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.
*
தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள்,
ஞா.சத்தீஸ்வரன்,
முதல் பதிப்பு 2022,
விலை உரூ 120/-
ஆம்பல் பதிப்பகம், சென்னை.
தொடர்புக்கு: 7868934995.
*
கட்டுரையாளர்:
முனைவர் ஏர் மகாராசன்.
சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.

புதன், 7 பிப்ரவரி, 2024

என் பெயரெழுதிய அரிசி: அகிம்சைச் சொற்களால் மானுடம் பாடும் கவிதைகள் - அம்சம் மகாராசன்.


சொல் புதிது, சுவை புதிது, பொருள் புதிது, சுவை மிக்க நவ கவிதை எனப் புதுக்கவிதை பாடியவர் பாரதி. அத்தகையப் புதுக்கவிதை மரபில், மானுடம் பாடும் நெறியை இக்காலத் தலைமுறையினருக்கு எளிமையாவும் கவித்துவமாகவும் உயிரோட்டமாகவும் கவிதைகளில் புலப்படுத்தும் கவிஞர்களுள் திரு கண்மணி ராசா குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

கண்மணி ராசா எழுதிய கவிதைகள் 'என் பெயரெழுதிய அரிசி' எனும் நூலாக அண்மையில் வெளிவந்திருக்கிறது.

மனிதர்கள் வாழும் இந்தச் சமுதாயத்தின் மலர்ந்த தருணங்களையும், மாறாத வடுக்களாய் அமைந்த தருணங்களையும், மனித ஆழ்மன உணர்வுகளையும் தமது கவிதைகளில் முழுமையான பாடு பொருள் ஆக்கியுள்ளார். 

சமூகத்தில் நாம் எந்தளவுக்குச் சூறையாடப்பட்டிருக்கிறோம்; ஒடுக்கப்பட்டிருக்கிறோம்; சுரண்டப்பட்டிருக்கிறோம் என்பதையும், அவரது ஆழ்மனதில் படிந்த உணர்வுகளையும் கவிதைகளில் இறக்கி, மனப்பாரத்தையெல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறார். 

புதிதாக வாசிப்பவர்களுக்கும்கூட கவிதையை ருசித்துக் காண்பதற்கான வடிவத்தில் கவிதைகளைத் தந்திருக்கிறார். கவிதையின் உணர்வைத் தனதாக்கிக் கொண்டு, கவிதையிலிருந்து மீள முடியாத அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் கண்மணி ராசா. 

செறிவான சொற்கள், காட்சிப் படிமங்கள், குறியீடுகள் , உவமைகள், உள்ளுறைகள் போன்ற உத்திகளைத் தனதாக்கிக் கொண்டு எழுதும் கவிஞர்களுக்கு மத்தியில், அனைத்துத் தரப்பு வாசிப்பாளர்களுக்கும் பொதுவானதாகவும், உலகத்தில் நிலைத்திருக்கும் சமூக நிலைப்பாட்டையும் பொதுவியலாய் எழுதியுள்ளார் கண்மணி ராசா. 

கவிஞருக்குச் சமூகம் கொடுத்திருக்கும் உணர்வையும் வலியையும் கவிதையை வாசிக்கும் ஒவ்வொரு வாசகருக்குள்ளும் கடத்தியுள்ளார் கவிஞர். தான் வாழும் சமுதாயம், நம் முன்னோர்கள் வாழ்ந்த சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகள், பசி, வறுமை, இரக்கம், கருணை, அடக்குமுறை, காதல், அன்பு, கனவு, இழப்புகள், நம்பிக்கை, ஏமாற்றம் போன்ற உணர்வுகளுக்குள் வாசகர்களையும் உறையச் செய்திருக்கிறார் கவிஞர்.

கவிஞரின் உருவத்தைப் போன்றும் உள்ளத்தைப் போன்றும் எளிமையான சொற்களும் ஆழமான உணர்வும் காத்திரமான உணர்வுகளும்தான் இவரது கவிதைகளில் நிரம்பியிருக்கின்றன. இவரது பெரும்பாலான கவிதைகள் அகிம்சைச் சொற்களையே கொண்டிருக்கின்றன. மனிதத்தின் மீதான அன்பின் சொற்களையே அவரது கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார். 

இவரது கவிதைகளின் வடிவம் எளிது என்றாலும், அவை கொடுக்கும் உணர்வும் அதன் தாக்கமும் கனமானவை. கவிதைகளைப் படிப்பவரை எளிதில் தட்டியெழுப்பி, சமகாலச் சமூகத்தையும் முந்தைய தலைமுறையினர் வாழ்வையும் எளிதில் நினைவூட்டி ரெளத்திரம் கொள்ள வைக்கின்றார் கவிஞர்.

"பொழுது சாய்ந்ததும் தெரிய
 செவ்வானம் அல்ல;
அது பொன்னுலகம்.
போராடினால்தான் கிடைக்கும்".

"கொக்கே
கொக்கே
முத்துப் போடு..!
கை நகங்களை
காட்டியபடியே
ஓடினர் குழந்தைகள்
ஐயோ...!
அது குண்டு போடும் ...
என்றலறியபடியே 
குழியைத் தேடினாள் 
அகதிக் குழந்தை".

"நீர் மாலைக்கு 
பொட்டப் புள்ளைக வாங்கம்மா...! எனும் குரல் கேட்டு,
சந்தனம் அப்பிய
கண்களிலிருந்து
சடாரென வழிந்தது
முன்னரே குளிப்பாட்டிய
தண்ணீரா ...?
அதுவரை அடக்கி வைத்த
கண்ணீரா ...?
இன்னமும் 
தவிக்கிறேன் நான்".

இப்படி, பகட்டில்லாத சொற்கள் மூலம் வலியை வாசகரின் மனதிற்கு அப்படியே நுழைக்கிறார்.

"இந்தக் கவிதையிலிருக்கும்
துயரம்
நீங்கள் கண்டதுதான்.
அப்புறமேன்
இந்தக் கவிதைக்கு 
வந்த கோபம் 
உங்களுக்கு 
வரவேயில்லை...?"

நம் மகிழ்ச்சியையும் வாழ்வையும் தொழிலையும் இழந்து ஏதிலியாய் ஆகிக் கொண்டிருக்கிறோம். நமது புழங்கு வெளியையும் புழங்கும் சொற்களையும் உணவையும் வரலாற்றையும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கவிதைக்கான ரௌத்திரத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார் கவிஞர்.

"ஆனாலும்
எவரும் அறியாதபடி
எங்கள் எல்லோரிடமும் 
இருக்கிறது 
கண்ணகியின் 
இன்னொரு மார்பு".

"பசி வந்தபோது 
என் தாத்தாவிடம்
நிலம் இருந்தது.
பசி வந்தபோது 
என் அப்பாவிடம் 
நெல் இருந்தது.
பசி வருகையில்
என்னிடம் ரேஷன் அரிசி இருக்கிறது. 
இனி
பசி வரும் போது 
என் மகனிடம் இருக்கும்...?"

"புழுக்கமாய் 
இருந்தாலும் சரி
பூட்ஸை அணிந்து கொள்.
எவ்வளவு நேரமானாலும் 
பரவாயில்லை.
மேலத்தெரு வழியாகவே 
பள்ளிக்குப் போ!
அங்குதான்
காலணி அணிந்ததற்காய்
கட்டி வைத்து அடித்தார்கள் 
உன் பாட்டனை".

"நகரத்து வீதிகளில்
நடந்து நடந்து
மகிழ்கிறான் 
சேரியிலிருந்து வந்தவன்
செருப்பணிந்த கால்களோடு".

"அடுப்பு வேலையில்
அவளுக்கு உதவியதில்லை.
ஆனாலும்,
அருமையாகச் சமைப்பேன் பெண்ணியக் கவிதை."

இப்படியாக, மிக எளிய நடையில் ஆழமான கருத்துக்களை ஒவ்வொரு கவிதையிலும் புலப்படுத்தியுள்ளார். கவிதைகளைப் படிக்கும்போது, அவற்றுள் தங்கி அனுபவித்து, அந்த உணர்வின் வழியில் உணர்வையும் வலியையும் அனுபவித்து, அதிலிருந்து வெளிவர ஒரு நிமிடம் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால் நான் முழுமையாக ஒரே மூச்சில் வாசித்த கவிதை நூல் இதுவென்றுதான் சொல்ல வேண்டும். 

கவிஞரின் சிந்தனையை, அவர் பார்க்கும் உலகத்தை, அவரது உணர்வை, எழுத்தில் யாவரும் ஏற்கும் வண்ணமாய் நிதானமான சொற்களைக் கொண்டு ரௌத்திரமான கருத்துக்களையும் அகிம்சை முறையில் எடுத்துரைக்கும் கவிதை நூலாக என் பெயரெழுதிய அரிசி அமைந்திருக்கிறது. 

கவிஞர் கண்மணி ராசா அவர்களுக்கு வாழ்த்துகள்.

*

என் பெயரெழுதிய அரிசி,
கண்மணி ராசா,
முதல் பதிப்பு 2023,
வாசக சாலை பதிப்பகம்,
விலை: 130/-
*
கட்டுரையாளர்:
திருமதி அம்சம் மகாராசன்,
முதுகலை ஆசிரியர்,
செம்பச்சை நூலக நிறுவனர்.



தமிழ் வேறு; திராவிடம் வேறு. ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக: மொழி ஞாயிறு பாவாணர்.

கால்டுவெல் கண்காணியார் முதன்முதலாகத் திராவிட மொழிகளை ஆய்ந்ததினாலும், அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சி இன்மையாலும் தமிழை திராவிடத்தினின்று வேறுபடுத்திக் காட்டத் தேவையில்லாதிருந்தது. இக்காலத்திலோ ஆராய்ச்சி மிகுந்து விட்டதனாலும், வட மொழியும் இந்தியும் பற்றிய கொள்கையில் தமிழர்க்கும் பிற இனமொழியாளர்க்கும் வேறுபாடு இருப்பதனாலும், தமிழென்றும் பிற இன மொழிகளையே (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்றவற்றையே) திராவிடம் என்றும் வேறுபடுத்திக் காட்டுதல் இன்றியமையாதது.

தமிழ் தூய்மையான தென்மொழி என்றும், திராவிடம் என்பது ஆரியம் கலந்த தென்மொழிகள் என்றும் வேறுபாடறிதல் வேண்டும். பால் தயிராய்த் திரிந்த பின் மீண்டும் பாலாகாதது போல், வட மொழி கலந்து ஆரிய மயமாகிப்போன திராவிடம் மீண்டும் தமிழாகாது. 

வடமொழிக் கலப்பால் திராவிடம் உயரும்; தமிழ் தாழும். ஆதலால், வடசொல் சேரச்சேரத் திராவிடத்திற்கு உயர்வு. அது தீரத் தீரத் தமிழிற்கு உயர்வு.

திராவிடம் என்ற மொழிநிலையே வடமொழிக் கலப்பால்தான் நேர்ந்தது. அல்லாக்கால் அது கொடுந்தமிழ் என்றே பண்டுபோற் கூறப்படும். தமிழ் தனித்தியங்கும். திராவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.

இங்ஙனம் வடமொழியை நட்பாகக்கொள்ளும் திராவிடத்திற்கும், பகையாகக்கொள்ளும் தமிழிற்கும் ஒருசிறிதும் நேர்த்தம் இருக்கமுடியாது. ஆதலால், தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி, திராவிடம், திராவிடன், திராவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல்கூடாது. 

திராவிடம் அரை ஆரியமும், முக்கால் ஆரியமும் ஆதலால், அதனோடு தமிழை இணைப்பின், அழுகளோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல், தமிழும் கெடும்; தமிழனும் கெடுவான். பின்பு தமிழுமிராது; தமிழனுமிரான். இந்தியா முழுவதும் ஆரியமயமாகி விடும்.

திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு என்னும் கொள்கையை விட்டுவிட்டுத் திராவிட நாடு என்னும் பொருத்தமற்றக் கொள்கையைக் கடைபிடித்துத் தமக்குத் தாமேயும் முட்டுக்கட்டை இட்டுக் கொண்டது. இது நீங்கினாலொழிய முன்னேற்றமும் வெற்றியுமில்லை. தமிழ் என்னும் சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும் திராவிடம் என்னும் சொல்லில் இல்லை.

தமிழ், சென்னையைத் தலைநகராகக் கொண்ட தென்னாட்டில் மட்டுமுள்ளது. தமிழ் வேறு; திராவிடம் வேறு. தமிழையும் திராவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையும் கலப்பது போன்றது. 

வடமொழி கலந்து ஆரிய மயமாகிப்போன திராவிடம் மீண்டும் தமிழாகாது. திராவிடரும் மீண்டும் தமிழராக மாட்டார். அரை ஆரியமும், முக்கால் ஆரியமுமான திராவிடத்தோடு தமிழை இணைத்தால், அழுகலோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல் தமிழும் கெடும். தமிழனும் கெடுவான்.

தமிழ் வேறு; திராவிடம் வேறு என்பதுடன், ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக. 

தமிழ் என்னும் சொல் தெலுங்கம், குடகம், துளுவம் என்பன போல் சிறுபான்மை ‘அம்’ ஈறு பெற்றுத் தமிழம் எனவும் வழங்கும்.

கடல் கோளுக்குத் தப்பிய குமரிக் கண்டத் தமிழருள் ஒரு சாரர் வடக்கே செல்லச் செல்ல, தட்ப வெப்ப நிலை மாறுபாட்டாலும் பலுக்கல் (உச்சரிப்பு) தவற்றாலும், மொழிக் காப்பின்மையாலும், அவர் மொழி மெல்ல மெல்லத் திராவிடமாகத் திரிந்தது. திராவிடராக உடன் திரிந்தனர். தமிழ் சிறிது சிறிதாகப் பெயர்ந்து திராவிடமாய்த் திரிந்ததினாலேயே, வட நாடுகளை வேற்று மொழி நாடென்னாது “மொழி பெயர் தேயம்” என்றனர் முன்னோர். “மொழி பெயர் தேசத்தாயிராயினும்” என்பது குறுந்தொகை (11). 

தமிழ் திராவிட மொழிகளாகத் திரிந்த முறைக்கிணங்க தமிழம் என்னும் பெயரும் திரமிளம் - த்ரமிடம் - த்ரவிடம் எனத் திரிந்தது. ஒப்பு நோக்க : தோணி - த்ரோணி (வட சொல்), பவழம் - ப்ரவாளம் (வ), பித்தளை - இத்தடி (தெலுங்கு), குமி - குலி (தமிழ்).

தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிகுந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர, சோழ, பாண்டியர் தொன்று தொட்டுத் தமிழகத்தைப் புகழ் பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது; திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திராவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது. வேத காலத்துப் பிராகிருத மொழிகளுள் ஒன்று த்ராவிடீ எனப்பட்டதையும், ஐந்நூறாண்டுகட்கு முன்பிருந்த பிள்ளை லோகார்சீயர் தமிழிலக்கணத்தைத் “த்ராவிட சாஸ்த்ரம்” எனக் குறித்திருப்பதையும் காண்க.

திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும், வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும், தமிழும் திரவிடமும் ஒன்று சேர முடியாதவாறு வேறுபட்டு விட்டமையாலும், ஆந்திர, கன்னட, கேரள நாடுகள் தனி மாகாணங்களாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடு கூட விரும்பாமையாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவேயொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ் நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும்.

எந்நாட்டிலும் மக்கள் பற்றிய இரட்டைப் பகுப்பில், உள் நாட்டு மக்களை முதற் குறிப்பதே மரபும் முறைமையுமாதலால், இனித் தமிழ் நாட்டு மக்களையும் தமிழர், தமிழரல்லாதார் என்றே பிரித்தல் வேண்டும். ஆயினும், தமிழைப் போற்றுவாரெல்லாம் தமிழரென்றே கொள்ளப்பெறுதல் வேண்டும்.

உலகின் முதன்முதல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அடைந்து, அவற்றைப் பிற நாடுகளிற் பரப்பினவன் தமிழனே. ஆதலால், அவன் எட்டுணையும் ஏனையோர்க்குத் தாழ்ந்தவனல்லன். தமிழ் வல்லோசையற்ற மொழியென மூக்கறையன் முறையிற் பழிக்கும் திரவிடர் கூற்றையும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக்குலப் பிரிவினை பற்றித் தமிழனை இழித்துக் கூறும் ஆரிய ஏமாற்றையும் பொருட்படுத்தாது, ‘நான் தமிழன்’ என ஏக்கழுத்துடன் ஏறு போற் பீடு நடை நடக்க, தாழ்வுணர்ச்சி நீங்குத் தகைமைக் கட்டங்கிற்றே வாழ்வுயர்ச்சி காணும் வழி. தமிழ் வாழ்க! 

திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் நூலில் இருந்து…

*



தமிழர் அடையாளம் எது?:
திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்,
தொகுப்பாசிரியர்: மகாராசன்,
யாப்பு வெளியீடு, சென்னை,
முதல் பதிப்பு: டிசம்பர் 2022,
பக்கங்கள்: 128,
விலை: உரூ 150/-
*
நூல் வேண்டுவோர் தொடர்புக்கு:
செந்தில் வரதவேல்,
யாப்பு வெளியீடு, சென்னை.
பேச: 90805 14506

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

ஆற்றுநீர்ப் போக்கும் நாவிதர் சமூக வாழ்வும்: அம்சம் மகாராசன்

நீர்வழிப்படூஉம் நூல் மதிப்புரை

அண்மையில் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றிருக்கும் 'நீர்வழிப்படூஉம்' நூலினை வாசிக்க வேண்டும் எனும் பெரு விருப்பம் உள்ளுக்குள் இருந்தது. அதற்குக் காரணம், அந்நூலின் தலைப்புதான். 

கதை நூலினை மெதுமெதுவாய் வாசிக்கக்கூடிய எம்மைப் போன்றோருக்கு, விறுவிறுப்பாக வாசிக்க வைக்கும் கதைநூலாக 'நீர்வழிப்படூஉம்' அமைந்திருக்கிறது. இந்நூலை எழுதிய திரு தேவிபாரதி அவர்கள், தமது அனுபவங்களையும் தம்மைச் சுற்றிய சமூக மனிதர்களின் அனுபவங்களையும் கதை சொல்லல் வழியாகப் பகிர்ந்திருக்கிறார். 

வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்ட நாவிதர்களின் சமூக வாழ்வையும், தங்களுக்கு முன்பாக வாழ்ந்த தலைமுறையினர் அனுபவித்த எதார்த்த வாழ்வின் வறுமையையும், பிற சமூகங்கள் வாழ்வதற்காக நாவிதர் சமூகம் பட்ட பாடுகளையும் கதையில் முன் பின் நகர்த்தி, அவற்றையெல்லாம் சிதையாமல் எழுத்தில் கோர்த்துள்ளார் தேவி பாரதி.

நாவிதர், மருத்துவர், முடி திருத்துபவர், அம்பட்டையர், பார்பர் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்தச் சமூகத்தினரின் புழங்குவெளி மிகக் குறுகலானது. பத்துக்குப் பத்து அளவு கொண்ட அறை அல்லது குடிசை. இதோடு மட்டும்தான் அவர்களின் புழங்குவெளி எனப் பொதுச் சமூகம் கருதிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தத் தலைமுறைக்கு முன்பு வாழ்ந்திருந்த அந்தச் சமூகத்தின் குடி நாவிதன், குடி நாசுவத்தி இல்லாமல் மனித குலத்தில் எதுவும் நடக்காது எனும் நிலைதான் இருந்திருக்கிறது.

மனிதகுலம் இயங்குவதற்கு இரத்த நாளங்களாய் நாவிதர்கள் இருந்திருக்கிறார்கள். பண்ணையார் / பண்ணையாரச்சிகள் ஏவும் வேலைகளையும் - ஏவாத வேலைகளையும் செய்யக்கூடியவர்களாகவும், கல்யாணம், கருமாதி, பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு, பிள்ளைப்பேறு, நோய் நொடி வந்தால் மருந்து கொடுத்தல் எனச் சகலமும் கற்றவர்களாகவும், தனக்கென்று தனி இடம் வகித்தவர்களாகவும், வா என்றால் வந்து நிற்பவர்களாகவும், போ என்றால் போகின்றவர்களாகவும், அவமானங்களைப் போர்வை போன்று போர்த்தியவர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். நாவிதர் வாழ்வில் வறுமையும், மதிப்பில்லாத கடின உழைப்பும், பண்ணையார் படுத்தும் அவமானமும் என எல்லாவற்றையும் சுமந்தலைந்த நாவிதர்களின் கடந்தகால வாழ்வைத்தான் இந்நூல் பேசுகிறது.

தமிழ்நாட்டின் கொங்கு வட்டாரத்தில் உள்ள ஈரோட்டைச் சுற்றியுள்ள ரங்கம்பாளையம், ஆம்பராந்துக்கரை, உடையாம்பாளையம், வெள்ளக்கோயில், கருங்கல்பாளையம், நாச்சு வலசு ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளைக் கதைக்களமாக வைத்தும், அவ்வட்டாரச் சொற்களையே கதையின் எழுத்து நடையாகவும் பயன்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். 

நீர்வழிப்படூஉம் கதையில் வரும் முக்கியமான கதைமாந்தர், 'காரு' என எல்லோராலும் அழைக்கப்படும் ஆறுமுகம் ஆவார். காருவின் தங்கை மகனான ராசாதான் இந்நூலின் கதை சொல்லி. இந்தக் கதை சொல்லியின் தாய்மாமன்தான் 'காரு மாமா' ஆவார்.

காரு மாமாவின் இறப்புச் செய்தி அறிந்து அங்கு செல்லும் கதைசொல்லியான ராசா, காருமாமாவின் இறப்புச் சடங்கிலிருந்து அவரது கதையைச் சொல்லத் தொடங்கி, காரு மாமாவின் சமூகப் பின்புலமான நாவிதர் குலத்தைப் பற்றிய விரிந்த கதையைச் சொல்லியிருக்கிறார்.

காரு மாமாவின் அக்காவை உடையாம்பாளையத்தில் திருமணம் செய்து கொடுக்கிறார்கள். அந்தப் பெரியம்மாவிற்கு ஒரு பெண்குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த கொஞ்ச நாளிலேயே அவரது கணவரும் இறந்து விடுகிறார். அடுத்ததாக, காரு மாமாவின் மூத்த தங்கையை வாத்தியார் வேலை பார்ப்பவருக்குக் கட்டித் தருகிறார்கள். அவரும் ஐந்து பிள்ளைகளைப் பெற்ற பின்னர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடுகிறார். இவர் கதை சொல்லி ராசாவின் அம்மா ஆவார். காரு மாமாவின் கடைசித் தங்கை திருமணமாகி மெட்ராசில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் ராசம்மாவைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார் காரு மாமா. 

காரு மாமாவின் அக்கா வீட்டுக்காரர் இறந்த பிறகு, குடி முறைமை செய்வதற்கு உடையாம்பாளையத்தில் ஆள் இல்லாமல் போகிறது. இதனால், பெரியம்மாவை அழைத்து, வேறு ஆளை நியமிக்கச் சம்மதம் கேட்கிறார்கள் பண்ணையார்கள். அப்போது, என் கணவர் குடி முறைமை செய்திருந்த இடத்தில் வேறு யாரையும் நியமிக்க விடமாட்டேன்; என் அண்ணனையே அழைத்து வருகிறேன் என்று கூறிவிடுகிறார். 

இந்நிலையில், பெரியம்மாவின் அண்ணனை அழைத்துவர ரங்கம்பாளையம் செல்கிறார்கள். அங்கிருக்கும் பண்ணையார்களிடம் பெரியம்மாவும் உடையாம்பாளையம் பண்ணையார்களும் காருவை அழைத்துச்செல்ல அனுமதி கேட்கிறார்கள். அதற்கு, அவர்கள் "காருக்கு நிகர் யாரும் வர இயலாது; எங்கயாச்சு தெக்க வடக்க போயி எவனாச்சுங் கெடச்சாக் கூட்டியாந்து வெச்சுக்குங்கோ" என அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்கள். 

உடையாம்பாளையம் பண்ணையார்கள் நாவிதர்களைத் தேடி அலைய, பக்கத்து ஊரான முத்தயன் வலசுலேயே ஆள் கிடைத்து விடுகிறது. அவரும் பெரியம்மாவும் சேர்ந்து குடிமுறையை மிக நேர்த்தியாகச் செய்து வருகிறார்கள். இதற்கிடையில், சவுந்திரா என்பவரை அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார் பெரியம்மா. முத்தயன் வலசு பெரியப்பாவுக்குத் திருமணம் ஆன கொஞ்ச நாள்கள் கழித்து, பெரியம்மாவும் சவுந்திரா பெரியம்மாவும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதை ரங்கம்பாளையத்திலிருக்கும் காரு மாமாவிடம் பெரியம்மா சொல்லி அழுகிறார். 

பெரியம்மாவின் மீது பாசத்தில் இருந்த காரு மாமா, ரங்கம்பாளையத்துப் பண்ணையாரிடம் எதுவும் சொல்லிக் கொள்ளாமல், பெரியம்மாவிற்குத் துணையாக அம்மாச்சி, அப்புச்சி, அம்மா, மெட்ராஸ் சின்னம்மா என எல்லோரையும் அழைத்துக் கொண்டு உடையம்பாளையம் வந்து விடுகிறார். முத்தையன்வலசு பெரியப்பா பார்த்துக் கொண்டிருந்த குடிமுறைமையைச் சரிபாதியாகப் பிரித்துக் கொண்டு நாவிதம் செய்து வருகின்றனர். இதற்கிடையில், காருமாமாவின் மனைவியான ராசம்மா அத்தை, தமது குழந்தைகளுடன் அவ்வூரிலிருந்த செட்டி ஒருவரோடு ஓடிப் போகிறார். 

மனைவியையும் பிள்ளைகளையும் இழந்த வேதனையில் இருந்த காரு மாமாவை, காக்கா வலிப்பு நோய் தாக்குகிறது. மனமுடைந்த காருமாமா குடி முறைமை செய்வதையே விட்டு விடுகிறார். பெரியம்மாவும் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்ததிலிருந்து அடிக்கடி மகள் வீட்டிற்குச் சென்று மாதக்கணக்கில் அங்கேயே தங்கிவிடுகிறார். மனைவி, குழந்தைகள், உடன் பிறந்தவர்களின் பிரிவு, தனிமை என அனைத்தும் சேர்ந்ததால் காரு மாமா மனப்பிறழ்வுக்கு உள்ளாகி பின்பு இறந்தும் போகிறார். 

இறந்துபோன தமது அண்ணனின் சேறுபடிந்த காலங்களை நினைத்துப் பெரியம்மா ஒப்பாரி பாட, ராகத்திற்கும் சலங்கை ஒலிக்கும் ஏற்றாற் போல் முத்துவலசு பெரியப்பா ஆட, சொந்த பந்தம், சண்டைச் சச்சரவு, ஆட்டம் பாட்டமாய் இறப்பு வீட்டு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கையில், காரு மாமாவிற்குக் கொள்ளி வைப்பதற்கு அவரது மகன் ஈஸ்வரனையும் அழைத்து வந்துவிடுகிறார்கள். சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆடிப்பாடியவாறு காரு மாமாவின் உடல் சுமந்த தேர் காடு நோக்கிச் செல்கிறது. தேர் செல்லும்போது கனமழை கொட்டித் தீர்க்கிறது. எதையும் கண்டுகொள்ளாமல் பூவும் நீரும் புண்ணியவானுக்கே என்றவாறு கூட்டம் நகர்கிறது. 

இறுதியாக, தாலியறுப்புச் சடங்கன்று ராசம்மா அத்தையும் தமது மகள் ஈஸ்வரியோடு பரிதாபமாக வந்து சேர்கிறார். செட்டி தன்னுடன் ஆறு மாதம் இருந்துவிட்டு ஏமாற்றிவிட்டுப் போன வாழ்வையும், செட்டியோடு சென்ற பிறகு பட்ட பாடுகளை எல்லாம் சொல்லி அழுகிறார் ராசம்மா அத்தை. இதனால், அவர் மீது இருந்த கோபம் எல்லோருக்கும் தணிகிறது. 

ராசம்மா அத்தையால் ஏற்பட்ட அவமானம், காருமாமா இறப்பு என எல்லாவற்றையும் கடப்பது போல் கடந்து, அவரவர்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்கிறார்கள். வெட்டுதல், ஏற்றம், சமநிலை, சரிவு என வாழ்வின் அனைத்துத் தருணங்களையும் உள்ளடக்கிய தாயம் விளையாட்டு போலத்தான் அவர்களது வாழ்வும் அமைந்திருந்தது என்பதாகக் கதை உணர்த்துகிறது. வறுமையையும் அவமானங்களையும் அனுபவித்த நாவிதக் குடிகள், எல்லாவற்றையும் கடந்து போவதுபோல்தான் காருமாமாவின் இறப்பையும் கடந்து செல்கிறார்கள். 

தாயம் விளையாட்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடந்துசெல்வதுபோல, விளையாட்டில் ஏற்ற இறக்கங்கள் இருப்பதுபோல, நாவிதர்களின் குடிமுறைமை வாழ்வும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது; அவர்களது வாழ்வும் ஏற்ற இறக்கங்களையும் இன்ப துன்பங்களையும் கொண்டதாக இருந்திருக்கிறது. வாழ்வும் ஒரு விளையாட்டுபோலத்தான் என்பதைக் கதையின் இறுதிப் பகுதி சொல்லிச் செல்கிறது.

இங்குள்ள ஒவ்வொரு சமூகமும் தங்களுக்கென்று குடி நாவிதர் குடும்பங்களைத் தத்தமது ஊர்களில் வைத்திருப்பது வழமையாய் இருந்திருக்கிறது. குடி நாவிதரை வைத்திருக்காத சமூகங்கள் ஏசலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே, குடி நாவிதர்களை ஒவ்வொரு சமூகமும் வைத்திருப்பதைச் சமூகக் கௌரவமாகக் கருதப்பட்டிருக்கிறது. ஒரு சமூகத்தைச் சார்ந்தும், அதற்குச் சேவகம் செய்வதும்தான் குடி நாவிதர்களின் குடி முறைமை வாழ்வாக இருந்திருக்கிறது. 

குடி நாவிதர் இல்லாமல் எவ்வளவு பெரிய பண்ணைக்காரனாலும் ஒன்றும் செய்ய முடியாது. கல்யாணம், காட்சி, குழந்தைப் பேறு, வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் முதலில் வந்து நிற்பவர்கள் குடி நாவிதர்கள்தான். ஒவ்வொன்றையும் எப்படிச் செய்ய வேண்டும், யாருக்குத் தகவல் சொல்ல வேண்டும், என்னென்ன வாங்க வேண்டும், எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று எல்லாவற்றையும் தீர்மானித்துச் செய்ய வேண்டிய இடத்தில் நாவிதர்கள்தான் இருந்திருக்கிறார்கள். பண்ணையக்காரர்களிடம் செல்வம் இருந்தது. நாவிதர்களிடம் அந்தச் செல்வத்தைச் சேர்ப்பதற்கான உழைப்பு இருந்திருக்கிறது . 

பண்ணையாரச்சிகளுக்குக் குடி முறைமை செய்பவர்கள் குடி நாசுவத்தி ஆவார்கள். குடி நாவிதர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் குடி நாசுவத்திகள். 

பண்ணையாரச்சிகளின் பிள்ளைப் பேறு காலத்தில் கம்பறு கத்தியை எடுத்துக்கொண்டு எந்நேரமாக இருந்தாலும் பிரவசம் பார்க்கச் செல்வார்கள் குடி நாசுவத்திகள். பிரசவம் பார்க்கும் வீட்டில் இவர்கள்தான் அதிகாரம் படைத்தவர்கள். குழந்தை பிறந்த பிறகு குழந்தையையும் தாயையும் குளிப்பாட்டிக் கொடுத்துவிட்டு, அவர்களுடன் மூன்று நாள்கள் தங்கி விடுவார்கள். தனிக்கட்டில், போர்வை, தலையணை, தேனீர், சாப்பாடு என்று சகலமும் அனுபவிப்பார்கள். அதாவது, குடும்ப மருத்துவச்சிகளாக இருந்திருக்கிறார்கள்.

யாருக்கெல்லாம் பிரசவம் பார்க்கிறார்களோ, அக்குழந்தையைப் பல காலம் கழித்துப் பார்த்தாலும் கண்டுபிடித்து விடுவார்கள். தாங்கள் பிரசவம் பார்த்த குழந்தைகளுக்கு நோய்நொடி வந்தால் துடித்துப் போவார்கள். மருந்துகளையும் எண்ணெய்களையும் கொண்டு நோய் சரியாகும் வரை இருப்புக் கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்ட குடி நாசுவத்தியாகத்தான் பெரியம்மா எனும் கதைமாந்தர் இருந்திருக்கிறார். குடி நாசுவத்திகளைக் குறித்த விவரிப்புகள் பெரியம்மாவின் அனுபவங்களாக விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன.

இந்நூலில் குடிமுறைமை செய்யும் குடி நாவிதர் / குடி நாசுவத்தி பற்றியும், அவர்களுக்கான ஒரு காலம் இருந்திருக்கிறது என்பது பற்றியும் முழுமையாகக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், குடி முறைமை செய்யும் நாவிதர்களின் ஓயாத உழைப்பும், குடி நாசுவத்திகளின் கம்பறு கத்தியும், பேறு கால வைத்திய முறையும் மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் வரும் பல கதைமாந்தர்கள் வாசிப்பவர் மனங்களில் உலாவுவது போலவே வந்துபோகிறார்கள். நமது முன்னோர்கள் வதைகள் பல பட்டுத்தான் நம்மை வளர்த்திருக்கிறார்கள் என்னும் செய்திதான் கதை வடிவில் ஆவணமாக்கப்பட்டிருக்கிறது.

இந்நூலைப் படிக்கும்போது ஒரு இடங்களில்கூட சோர்வோ சலிப்போ ஏற்படவில்லை. சில பக்கங்களைக் கடந்து செல்வோம் என்ற எண்ணம்கூடத் தோன்றவில்லை. சொற்கள் புரியாத இடங்களில்கூட நின்று, திரும்பப் படித்துப் புரிந்து கொண்டு, கதையோடும் அதன் நிகழ்வுகளோடும் வாழ்ந்தது போன்ற அனுபவத்தை இந்நூல் தந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

எங்கோ பிறப்பெடுத்த ஆற்றுநீர் அதன் வழியில் பள்ளம் உள்ள திசையின் பக்கம் செல்வதுபோல், நாவிதர் சமூகமும் தமது உயிரைத் தக்க வைத்துக்கொள்ள வெவ்வேறு ஊர்களுக்குச் செல்கிறார்கள்; செல்லும் ஊரைத் தமது சொந்த ஊராகக் கருதுகிறார்கள்; அவ்வூரில் உள்ளவர்களையே தம் சொந்த மக்களாகக் கருதி வாழ்கிறார்கள். 

அந்தந்த ஊர்களில் உள்ள பண்ணையார்கள் செழித்திடுவதற்காக, அவர்களுக்குச் சேவகம் செய்து வந்த நாவிதர்கள், வறுமையையும் கொடுமையையும் எதிர்த்துப் போகும் மனமற்றவர்களாய் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்க்கையில் பட்ட பாடுகளையும் படாத பாடுகளையும் மனதில் சுமந்து கொண்டு, குடி முறைமைச் சேவகம் செய்து பிழைக்கும் வாழ்க்கை முறையைத்தான் அடுத்தடுத்த தலைமுறைக்கும் அதே வழியில் அதன் போக்கில் ஆற்றுப்படுத்தி வாழ்ந்திருக்கின்றனர் நாவித சமூகத்தினர். 

எதிர்த்துப் போகும் வழக்கம் ஆறுகளுக்கில்லை. ஆற்றுநீர் வழிப்போக்கைப் போன்றுதான் நாவிதர் வாழ்வும் இருந்திருக்கிறது. அதனால்தான், 'நீர்வழிப்படூஉம்' எனும் சொல்லால் நாவிதர் வாழ்வைக் குறியீடாகக் குறிக்கும் தலைப்பாக வைத்திருக்கிறார் தேவி பாரதி அவர்கள்.

நீர்வழிப்போக்கைப் போலத்தான் நாவிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், நீர் பாயாத வறண்ட நிலமாகத்தான் - வெந்தழியும் நிலமாகத்தான் நாவிதர் சமூகத்தின் வாழ்வு இருந்திருக்கின்றது என்பதை நீர்வழிப்படூஉம் ஆவணப்படுத்தி இருக்கிறது.

ஒரு சமூகத்தின் வாழ்வியலையும் வரைவியலையும் புனைகதை வழியாகப் பதிவு செய்திருக்கும் திரு தேவிபாரதி அவர்களுக்கு மிக்க நன்றி. 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கும் நீர்வழிப்படூஉம் நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

நீர்வழிப்படூஉம், 
தேவிபாரதி,
முதல் பதிப்பு, 2020,
நற்றிணைப் பதிப்பகம்.
*
கட்டுரையாளர்:
திருமதி அம்சம் மகாராசன்,
முதுகலை ஆசிரியர்,
செம்பச்சை நூலக நிறுவனர்.

செவ்வாய், 9 ஜனவரி, 2024

ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் படிக்க வேண்டிய புத்தகம் - வாசுகி தேவராஜ்


கற்றல் அல்லது கல்வி என்பது ஒரு மாணவனின் மனநிலையைச் சார்ந்தது. குறிப்பாக, அவன் விருப்பு வெறுப்புகளை, புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இவற்றைக் கட்டமைக்கும் அடிப்படைக் கல்வி (Basic Education) தான் பள்ளிக் கல்வி.

பள்ளிக்கல்வியில் மாணவர்களை நேரடியாகப் பாதிப்பது ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சமூகம்.

ஆசிரியர் என்பவர் கல்வி உயர் அதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஆனால், பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் எந்த வரைமுறையும் இல்லை. பிரச்சனை என்று ஒன்று எல்லை மீறும்போதுதான் சட்டத்தின் பார்வைக்கு வரும். 

பெற்றோர் மற்றும் சமூகத்தைவிட ஒரு ஆசிரியர் மாணவனை அதிகம் பாதிப்பவராக இருக்க வேண்டும். பாடங்களை எளிதாகவும் சுவையுள்ளதாகவும் தருவதன் மூலமும், மாணவர்களிடம் மரியாதையுடனும் நடப்புணர்வுடனும் நேசிப்பதாலும் சிறப்பாகச் செய்ய முடியும். 

மாணவர்களிடம் நட்புணர்வு கொள்ள, நேசிக்க பெரிய மெனக்கெடல் தேவையில்லை. ஆனால், எளிதாக்க,  சுவையாக்க உயர்நிலைக் கல்விவரை செய்யலாம். உயர்நிலைக் கல்வியின் பாடங்களை எளிதாக்குவது அத்தனை சுலபமில்லை என்றே நினைக்கிறேன். 

மெல்லக் கற்கும் மாணவர்களுக்குக் கடினமாக உள்ள பாடங்களைத் தவிர்த்து, எளிதாக உள்ள பாடங்களைப் படிக்க வைத்து பாஸ் மார்க் எடுக்க வைக்க வேண்டும். வேறு வழியில்லை. 

மெல்லக் கற்கும் மாணவனிடம் 'இந்தப் பாடம் வேண்டாம். வேறு பாடம் படித்தால் போதும்' என்று சொல்வது அவன் மனநிலையை எவ்வளவு பாதிக்கும் என்று யாரும் யோசிப்பதில்லை. 
'Am I not fit to learn that lesson' எனக் கேட்பவனிடம் பதில் அற்று தோற்று நிற்கும் நிலைதான் இன்றைய ஆசிரியர்களுக்கு.
*
மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து - மகாராசன்
*
"பள்ளிக்கும் தேர்வுக்கும் வராமல்போன மாணவர்களில் பெரும்பாலோர் மெல்லக் கற்கும் மாணவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி, 10ஆம் வகுப்பில் தட்டுத் தடுமாறி தேரிய மாணவர்கள், 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் இருக்கின்ற பாடநூல்களின் கனம், பாடப்பொருண்மை, கற்றல் கற்பித்தல் நெருக்கடிகள், குறைந்தளவுத் தேர்ச்சி பெறுவதற்குக்கூட வழியின்மை போன்றவற்றைத் தெரிந்து கொண்ட மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு, கல்வியிலும் கற்றலிலும் நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது" என்கிறார் மகாராசன். ஆசிரியர் - மாணவர்களின் இன்றைய நிலையைப் படம்பிடித்துக் காட்ட இந்தப் பத்தி ஒரு சோறு பதம்.

நாங்குநேரி சம்பவம் ஏற்படுத்திய ஆழமான  அழுத்தமான பாதிப்பின் விளைவுதான் மகாராசனின் "மாணவர்கள் சமூக உதிறிகளாகும் பேராபத்து" நூல். இத்தகைய துர் சம்பவங்களின் வேர் எதுவென ஆராயும் ஒரு அலசல் கட்டுரையே இந்நூல். 

குற்றம் செய்தவனும் மாணவன், பாதிக்கப்பட்டவனும் மாணவன் எனில், தவறு எங்கு நடந்திருக்கிறது என ஆழ்ந்து யோசிக்க வைக்கிறார் ஆசிரியர். 

மாணவர்களின் கல்வி இடை நிற்றல், அவர்களைச் சமூக உதிரிகளாக மாற்றுகிறது. மூத்த தலைமுறையினரின் தாக்கம் பெரும் பங்காக இருக்கும் பட்சத்தில், இவனும் அடுத்த தலைமுறையின் இடைநிற்றல் மாணவர்களுக்குச் சமூக உதிரியாய் இருந்து தன்னைப் போல் மாற வழிகாட்டுவான் என்பது நிதர்சனம். 

மாணவர்களின் கல்வி இடை நிற்றல், விலகல் போன்ற செயல்களுக்குப் பல காரணிகள் இருந்தாலும், நூல் ஆசிரியர் அடிக்கோடிட்டுக் காண்பிப்பது பாடப்பொருன்மையைத்தான். அது நூறு சதவீதம் உண்மை!

பொருளாதாரப் பலம் ஏதுமற்றவர்கள் ஒரே பலமாகக் கருதுவது கல்வியை மட்டும்தான். அந்தக் கல்வியில் பின் தங்குவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஆசிரியர் குறிப்பிடுவது போல, பாடப்பொருன்மை என்பது முதன்மையான அழுத்தமான காரணியாகும். மாணவர்கள் மனதைப் பக்குவப்படுத்தாத கல்விமுறைதான் இன்றைய தலைமுறையினர் தடம் பிறழக் காரணம்.

மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு அந்தந்த வயதுக்கேற்ப  பாடப்பொருன்மைத் திட்டமிடல், கலைத் திட்டத் திட்டமிடல் போன்றவை இலகுவாக இருந்தால் மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் (drop out percentage) வெகுவாகக் குறையும். இதுவே நல்ல சமூகம் உருவாக ஒரு நல் மாற்றமாக அமையும்.

"பெருவாரியான மாணவர்களின் இடை நிற்றல், விலகல், தேர்வு எழுதாமை குறித்து அரசும் சமூகமும் உண்மையிலேயே அக்கறைப்படுவதாக இருப்பின், மெல்லக் கற்கும் மாணவர்களையும் கல்விச் செயல்பாடுகளில் பங்கேற்பும் ஈடுபாடும் வருகையும் கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டியது கட்டாயமாகும்" என்கிறார் மகாராசன். ஒரு சமூக அக்கறையுள்ள ஆசிரியரின் ஆதங்கக் கூற்று இது. 

ஆசிரியர்களும், கல்வி உயர் அதிகாரிகளும் கண்டிப்பாக இந்நூலைப் படித்தல் நலம்.

வாழ்த்துகள் மகாராசன்!!

கட்டுரையாளர்:
வாசுகி தேவராஜ்,
ஆசிரியை,
வேலூர்.

வியாழன், 28 டிசம்பர், 2023

மடைச்சி வாழ்ந்த கீழடி நிலத்தில் - மகாராசன்




கீழடியில் நடைபெற்ற முதல்கட்ட அகழாய்வின்போது அங்கு போய் வந்திருந்தேன். அங்கு கிடைத்திருந்த பல்வேறு தொல்லியல் பொருட்கள் எம்மை வியப்பில் ஆழ்த்தியிருந்தன. அங்கு கிடைத்த பானையோடுகளில் பல்வேறு பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மிக முக்கியமானது 'மடைச்சி' எனும் பெயர் பொறிக்கப்பட்ட பானையோடுதான். 

இந்த மடைச்சி எனும் பெயர் குறித்து அப்போது நான் எழுதிய கட்டுரைதான் 'ஆற்றங்கரை நாகரிகமும் மடைச்சி வாழ்ந்த கீழடி நிலமும்' எனும் கட்டுரை. 

மடைச்சி குறித்தும் நீர் மேலாண்மை குறித்தும் வெளிவந்த முதல் கட்டுரை அது. 

https://maharasan.blogspot.com/2017/12/blog-post_23.html

அதே அகழாய்வில் கிடைத்த பானையோட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டதும் கிடைத்திருந்தது. மீன் சின்னம் பொறித்த அந்தப் பானையோட்டின் முகப்பைத்தான் நான் எழுதிய 'தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு' எனும் நூலின் அட்டைப் படமாகவும் வந்தது.

கீழடி அருங்காட்சியகத்தில் நேற்று குடும்பத்தாருடனும் நண்பர் அய்யனாருடனும் திரும்பவும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமகிழ்ச்சி.

திங்கள், 25 டிசம்பர், 2023

தீயில் மடிந்த செந்நெல் மனிதர்கள் - மகாராசன்


வயல் நீர் வற்றி 
பசுந்தாளெல்லாம் 
பழுத்து நின்ற 
நெற்கதிர் அறுத்து களம் சேர்த்த 
கருத்த மனிதர்களின் கவலைகள், 
ஊமணி எழுப்பிய ஓசை போல் ஊருக்குக் கேட்காமலே 
ஒட்டிக் கிடந்தன வாழ்வில்.

வியர்வையில் கலந்த 
கரிப்புச் சுவையாய் 
நிலமும் உழைப்புமாய்க் கிடந்தாலும், 
விதை நெல் பாவும் காலம் முளைக்குமெனக் 
காத்துக் கிடந்தன சீவன்கள்.

வம்பாடு சுமந்த இடுப்பிலும் 
காய்த்துப்போன கைகளின் 
கக்கத்திலும் கசங்கிக் கிடந்த 
துண்டுத் துணியைத் 
தூக்கி எறிந்து, 
செந்நிறத்திலொரு துண்டை எடுத்துத் தோளில் போட்டன 
உழைத்துக் காய்த்த கைகள். 
நிலத்தில் கிடந்த
அதிகாரத்தின் வேர் முடிச்சுகள் 
அவிழத் தொடங்கின.

சாதிய வெறியும் 
நிலவுடைமைச் சதியும் 
சகதி மனிதர்களைச் 
சாவடிக்கக் காத்துக் கிடந்தன.
அய்யா சாமீ ஆண்டே எனக் 
கால் பிடித்துக் கதறி அழுது, 
வயிற்றுப் பாட்டுக்காய்க் 
கூடக் கொஞ்சம் கொடுங்களேன் 
எனக் கேட்டிருந்தால், 
போதுமடா போ போவென்றே 
பதக்கு நெல்லைக் கொடுத்திருக்கலாம் 
பழைய தோரணையோடு.

நெல்லை விதைத்தவர்கள் 
சொல்லை விதைத்தார்கள் 
கூடவே தன்மானம் சேர்த்து.

அரைப்படி நெல்மணி 
கூடக் கேட்டாரென, 
நெருப்பின் ஒரு துளி விதையைக் 
குடிசைக்குள் எரிந்து விட்டுப் போனார்கள்.

அகலின் நெய் குடித்துத் தூண்டிய சுடர் 
இருளைக் கிழித்து 
வெளிச்சம் தெளித்துக் கொண்டிருந்த 
இரவுப் பொழுதில், 
பெருந்தீ எழும்பியது குடிசையில்.

பொங்கிடும் 
எரிமலைக் குழம்பின் எச்சத்தை 
எச்சிலைத் துப்பியதுபோல 
உமிழ்ந்து போனது 
ஆண்டை அதிகாரம்.

வடுக்களோடும் வலிகளோடும் வயிற்றுப்பாட்டோடும் 
நெருப்பையும் சுமந்து 
சாம்பலாகிப் போனார்கள் 
வெண்மணி வயலின் 
செந்நெல் மனிதர்கள்.

வெண்மணி ஈகியருக்கு
வீரவணக்கம்.

ஏர் மகாராசன்